/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்றும் மாறாத வாசிப்பு மீதான நேசம்
/
என்றும் மாறாத வாசிப்பு மீதான நேசம்
UPDATED : பிப் 02, 2025 07:12 AM
ADDED : பிப் 02, 2025 01:13 AM

அள்ளிக் குவிந்திருக்கும், புத்தக குவியலுக்குள் உலவினர் புத்தக விரும்பிகள். தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், வேலன் ஓட்டல் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவு பெற இத்திருவிழாவில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று வருகின்றனர். வாசிப்பு மீதான நேசம் மென்மேலும் பெருகுகிறது என்பதை எடுத்துரைப்பதாக இது அமைந்தது.
புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் கூறிய கருத்துகள்:
பவுல்ராஜ், ஆசிரியர்:
தமிழ் பாடத்தில் இலக்கியம் சார்ந்த பாடங்களும் உள்ளன. அந்த பாடம் சார்ந்த புத்தகங்களை, இதுபோன்ற புத்தக கண்காட்சியில் பிள்ளைகள் வாங்கி படிக்கும் போது, அவர்கள் படிக்கும் பாடம் எளிதில் புரியும். இலக்கியம் மீதான ஆர்வமும் அதிகரிக்கும். அந்த எண்ணத்தில் தான், பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்துள்ளோம். சிந்து சமவெளி தொடர்பாக வைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கு, அதுகுறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
பிரமிக்கச் செய்தது
தங்கவேலு, என்.ஆர்.கே., புரம்:
புத்தக திருவிழாவை பார்த்து விட்டு வர வேண்டும் என்ற என் பேத்தியின் விருப்பத்திற்கு இணங்கவே வந்தேன். சில புத்தகங்களை புரட்டி பார்க்கையில் அதனை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. பொதுவாக, ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களை படிக்கும் வழக்கம் எனக்குண்டு. இங்கு பல்வேறு தலைப்புகளில் நிரம்பியிருக்கும் புத்தகங்கள் பிரமிக்க வைக்கிறது.
சிந்து, கல்லாங்காடு:
என், 11 வயது மகனுக்கு புத்தக வாசிப்பின் மீது மிகுந்த ஆர்வமுண்டு. இந்த வயதிலேயே ஒரு நாவல், ஒரு சிறுகதை எழுதியுள்ளான்; அவற்றை புத்தக திருவிழாவில் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைத்துள்ளோம். சிறுவர், சிறுமியருக்கான புத்தகங்கள், இங்கு நிரம்ப உள்ளன. புத்தகங்களின் அணிவகுப்பை பார்ப்பதும் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.---சரண்யா, வளையங்காடு:
கடந்த, 8 ஆண்டாக புத்தக திருவிழாவில் பங்கேற்கிறேன். பணிச் சூழல் காரணமாக புத்தகம் படிக்கும் வாய்ப்பு குறைவு என்ற குறையை, இதுபோன்ற புத்தக திருவிழாக்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த உலகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது கட்டாயம்.
---
வியன், மாணவர்:
என் தாத்தா புத்தகம் படித்துக் கொண்டே இருப்பர். அவரிடம் போய் அதுகுறித்து கேட்பேன். அலமாரியில் உள்ள புத்தகத்தை நீயே எடுத்து படி என்பார். இதுதான் புத்தக வாசிப்பின் மீது, எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன், நாவல் படிப்பேன்; தினமும், ஒரு மணி நேரம் புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவேன்.