/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுழற்றியடித்த சூறாவளி 30 ஆயிரம் வாழை சேதம்
/
சுழற்றியடித்த சூறாவளி 30 ஆயிரம் வாழை சேதம்
ADDED : மார் 21, 2026 05:01 AM

அவிநாசி: அவிநாசியை சுற்றி உள்ள கிராம பகுதிகளில், 2 நாள் முன் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், மக்காச்சோளம், பீட்ரூட், தென்னை மரங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தது.
அதேபோல் கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த சூறாவளிக்கு மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட்டது. அவ்வகையில், சேவூர், பாப்பாங்குளம், பொங்கலுார், கானுார், தண்டுக்காரன்பாளையம், ஆலத்துார், அசநல்லிபாளையம், முறியாண்டம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
இதனால், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாதத்தில் வாழை காய்களை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் முறிந்து விழுந்ததால் ஒரு ஆண்டு உழைப்பு வீணாகிப் போனது என விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.
வாழை மரம் சேதம் குறித்து தகவல் அறிந்த உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் ரமணி, சிவசக்தி, ஸ்ரீ ஆகியோர் வாழை மரங்கள் சேதமான தோட்டங்களுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து விவசாயிகளிடம் சேதமதிப்பு குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, வாழை சேதம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்புவதாகவும் தெரிவித்தனர்.

