/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு அதிகாரியின் தவறால் ஒட்டுமொத்த மக்கள் பாதிப்பு...
/
ஒரு அதிகாரியின் தவறால் ஒட்டுமொத்த மக்கள் பாதிப்பு...
ஒரு அதிகாரியின் தவறால் ஒட்டுமொத்த மக்கள் பாதிப்பு...
ஒரு அதிகாரியின் தவறால் ஒட்டுமொத்த மக்கள் பாதிப்பு...
ADDED : ஏப் 02, 2025 07:10 AM

அவிநாசி : அவிநாசி தாலுகா, வள்ளிபுரம் ஊராட்சியை சேர்ந்த மோகன மூர்த்தி, அவரின் மனைவி ரேணுகாதேவி மற்றும் உறவினர்களான சரவணகுமார், பழனிசாமி ஆகியோருக்கு சொந்தமாக, 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த, 2013ல் மோகனமூர்த்தி தனது நிலத்துக்கு இணையாக உள்ள, 1.34 ஏக்கர் அளவுள்ள இடத்தை விலை கொடுத்து வாங்கி கிரயம் செய்தார்.
மோகனமூர்த்தி வகையறாவினரின் நிலத்தை, திருப்பூர், கணக்கம்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன், கோபால், பாண்டி, முத்து வடுகநாதன் ஆகியோர் கடந்த பிப்., 20ம் தேதி குன்னத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்ததாக கூறி, மார்ச், 30ம் தேதி அதிகாலை, 3:00 மணி அளவில் 50க்கும் மேற்பட்ட ஆட்களுடன் கம்பி வேலி அமைக்க சென்றனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மோகனமூர்த்தி, பெருமாநல்லுாரில் போலீசில் புகார் அளித்தார். இதில், இரு தரப்பினரிடமும், போலீசார் விசாரித்தனர். அதில், 1925ம் ஆண்டுக்கு முன் நிலத்தின் உரிமையாளராக இருந்தவர்களின் வாரிசுகள் வாயிலாக நிலத்தை வாங்கியதாக போலியாக ஆவணம் தயார் செய்ததும், அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் போலீசார் கூறினர்.
இதனையடுத்து, நேற்று அவிநாசி தாலுகா அலுவலகத்தில், வள்ளிபுரம் கிராம நிர்வாக அலுவலர், பட்டா மாறுதல் செய்ய உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும், ஆவணங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஈஸ்வரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தாசில்தார் இல்லாததால், விவசாயிகள் அனைவரும், குன்னத்துார் சார்-பதிவாளர் அலுவலகம் சென்று, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், போலியாக ஆவணம் தயார் செய்ய உதவிய சார் - பதிவாளர் நிஷார் அகமது மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து, குன்னத்துாருக்கு விரைந்து வந்த மாவட்ட பதிவாளர் ஜெயப்பிரகாஷ், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ''வரும், 7ம் தேதிக்குள் உரிய விசாரணை செய்து போலி ஆவணங்கள் தயார் செய்து பதிவு செய்த பத்திரப்பதிவை ரத்து செய்வதற்கும், அதற்கு உடந்தையாக இருந்த சார்-பதிவாளர் மற்றும் அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என மாவட்ட பதிவாளர் உறுதியளித்தார். இதனால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

