/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஒழுக்கம், உழைப்பு நிறைந்த சமுதாயமே இலக்கு'
/
'ஒழுக்கம், உழைப்பு நிறைந்த சமுதாயமே இலக்கு'
ADDED : மார் 08, 2024 01:34 AM

''ஒழக்கம் நிறைந்த, உழைத்து வாழும் சமுதாயத்தை உருவாக்கி, ஏழ்மையை ஒழிக்க வேண்டும்'' என்ற நோக்கில் சேவையாற்றி வருகிறோம்'' என்கிறார், இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனர் இந்திரா சுந்தரம்.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கையர், திருநம்பியர் என பலரும், என்னிடம் உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் சொந்த தொழில் செய்து, உழைத்து, பிழைக்கவே விரும்புகின்றனர்; அவர்களின் நிலையறிந்து, தையல் மிஷன், பெட்டிக்கடை போன்ற அவர்களின் முதலீட்டுக்கான உதவிகளை செய்கிறோம். அவர்களும், உழைத்து, பிழைத்துக் கொள்கின்றனர்.
என்னிடம் தையல் மிஷன் வாங்கிய ஒரு மாற்றுத்திறனாளி, தையல் வகுப்பு நடத்தி, பலருக்கும் தொழில் கற்றுத்தருகிறார். கொரோனா காலகட்டத்தில், மாணவ, மாணவியரை ஆட்கொண்ட மொபைல் போன், அவர்களை மனதளவில் சீரழித்து விட்டது என்பதையும் எங்களது களப்பணியின் போது உணர்கிறோம்; போதை பழக்கம் கூட அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரை அத்தகைய பழக்க வழக்கங்கள், மொபைல் போனில் இருந்து மீட்க, உளவியல் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வாயிலாக, பள்ளிகள் தோறும், கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ளோம்; இதற்கு மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
நாங்கள் செய்யும் சேவை, உதவி என்பது, அப்போதைக்கு அவர்களுக்கு உதவுவதாக மட்டுமில்லாமல், அந்த உதவி அவர்களின் முதலீடாக மாறி, வாழ்க்கை முழுக்க அவர்களுக்கு வருமானம் தரக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது தான்.
பெண்கள் இன்று துணிச்சலுடன் வெளியில் வந்து பணிபுரிகின்றனர்; மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

