/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேருக்கு தான் தலைமை மருத்துவமனை; இருப்பதோ ஏழு மருத்துவர்கள் மட்டுமே!
/
பேருக்கு தான் தலைமை மருத்துவமனை; இருப்பதோ ஏழு மருத்துவர்கள் மட்டுமே!
பேருக்கு தான் தலைமை மருத்துவமனை; இருப்பதோ ஏழு மருத்துவர்கள் மட்டுமே!
பேருக்கு தான் தலைமை மருத்துவமனை; இருப்பதோ ஏழு மருத்துவர்கள் மட்டுமே!
ADDED : நவ 22, 2024 12:08 AM
திருப்பூர்; மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட போதும், டாக்டர் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சிரமம் உள்ளது. பலரும் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
காங்கயம் பஸ் ஸ்டாண்ட் எதிரில், அரசு மருத்துவமனை செயல்படுகிறது. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இருந்த திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால், கடந்த, 2022 ல் காங்கயம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
தரம் உயர்வுக்கு பின் கட்டடங்கள் புதியதாக கட்டப்படுகிறது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், டாக்டர்கள் எண்ணிக்கை உயரவில்லை. காங்கயம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பகுதியில் இருந்து தினசரி, 500 முதல், 650 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருகின்றனர். 70க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்; இரண்டையும் சேர்த்து, கவனிக்க, ஏழு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.
மருத்துவமனையில் உள்ள படுக்கை எண்ணிக்கை, வந்து செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை கணக்கிட்டால், குறைந்த பட்சம், 20 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், மூன்றில் ஒரு பகுதி மட்டுமே டாக்டர்கள் இருப்பதால், நோயாளிகள் காத்திருந்து மருத்துவரை சந்திக்க வேண்டியுள்ளது. காலை 7:30 மணிக்கு வருபவரும், மூன்று மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது.
டாக்டர்களே இல்லாத நிலையில், மருத்துவ உபகரணங்களும் முழுமையாக தருவிக்கப்படவில்லை. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, மூன்று ஆண்டுகளாகியும், இன்னமும் உயர்தர மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்படவில்லை. இதனால், உயர்சிகிச்சை என்றாலே, 25 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பூருக்கு, அல்லது, 35 கி.மீ., தொலைவில் உள்ள, பல்லடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலையே உள்ளது.
இது குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, 'காங்கயம் அரசு மருத்துவமனை நிலவரம் தொடர்பாக, மருத்துவ பணிகள் இயக்குனரகம், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. காங்கயத்துக்கு ஒவ்வொரு பிரிவுக்குமான சிறப்பு நிபுணர், அறுவை சிசிச்சை பிரிவை விரிவுபடுத்த தேவையாக, கூடுதலாக, பத்து டாக்டர்கள் வரை தேவை என கோரிக்கை வைத்துள்ளோம்,' என்றனர்.
பேரு தான் பெத்த பேரு...
தாக நீலு லேது!