/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி வாக்காளர் களைவதில் சிக்கல்!
/
போலி வாக்காளர் களைவதில் சிக்கல்!
ADDED : பிப் 14, 2024 11:39 PM

திருப்பூர் : லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்கள் பலர் 'ஆதார்' இணைக்காமல் உள்ளனர். போலி வாக்காளரை களைவதும், இரட்டைப்பதிவை தவிர்ப்பதும் சிக்கலாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியான இறுதிப்பட்டியலின்படி, மொத்தம் 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின்போதும், 'ஆதார்' இணைப்புக்கான படிவம், நேரடியாகவும், ஆன்லைனிலும் பெறப்பட்டுவந்தது. புதிய வாக்காளர்கள் பெரும்பாலும், பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்போதே, 'ஆதார்' விவரங்களை அளித்துவிடுகின்றனர்.
எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளரில் இதுவரை, 55.21 சதவீதம் பேர், அதாவது 12 லட்சத்து 94 ஆயிரத்து 544 வாக்காளர்கள் 'ஆதார்' இணைத்துள்ளனர்.
இவர்களில், 12 லட்சத்து 63 ஆயிரத்து 563 வாக்காளர்கள் ஆன்லைனிலும்; 30 ஆயிரத்து 981 பேர், படிவம் பூர்த்தி செய்து வழங்கி நேரடியாகவும் 'ஆதார்' இணைத்துள்ளனர்.
'ஆதார்' இணைப்பில், மடத்துக்குளம் முந்துகிறது; அந்த தொகுதியில், மொத்த வாக்காளரில், 68.37 சதவீதம் பேர் ஆதார் இணைத்துவிட்டனர். உடுமலையில், 62.77 சதவீதம்; அவிநாசியில் 60.29 சதவீதம்; தாராபுரத்தில் 62.16 சதவீதம்; காங்கயத்தில் 60.01 சதவீதம்; திருப்பூர் தெற்கு தொகுதியில் 53.32 பேர் இணைத்துள்ளனர்.
அதிக வாக்காளர்களை கொண்ட பல்லடம் தொகுதியில், 51.32 சதவீத வாக்காளர் ஆதார் இணைத்துவிட்டனர். பல்லடத்துக்கு அடுத்து அதிக வாக்காளரை கொண்ட திருப்பூர் வடக்கு தொகுதி மட்டும், வாக்காளர் அட்டை - 'ஆதார்' இணைப்பில் பின்தங்கியநிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 39 ஆயிரத்து 152 வாக்காளர் உள்ளனர்; இவர்களில், 35.67 சதவீதம் பேர் மட்டுமே 'ஆதார்' இணைத்துள்ளனர்.
பின்னடைவு ஏன்?
வாக்காளர் அட்டை - 'ஆதார்' இணைப்பிலும், அரசியல் கட்சியினரிடம் ஒருமித்த கருத்து இல்லை. பா.ஜ., உள்பட சில கட்சிகள், 'ஆதார்' இணைப்புக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றன; வேறு சில கட்சிகள் 'ஆதார்' இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. 'ஆதார்' இணைப்பு, கட்டாயமாக்கப்படவில்லை. இதனால், 'ஆதார்' இணைப்பு வேகமெடுக்காமல் உள்ளது.
சுருக்கமுறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட, போலி வாக்காளரை முழுமையாக நீக்கம் செய்வதில் சிக்கல் நீடித்துவருகிறது; வெளி மாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைத்தால் மட்டுமே, போலி, இரட்டை பதிவு வாக்காளரை சுலபமாக அடையாளம் கண்டு நீக்கி, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கமுடியும். தேர்தல் ஓட்டுப்பதிவையும் துல்லியமாக கணக்கிடமுடியும்.

