/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடம் பதிக்கும் தடகளம்; வீரர்கள் அமர்க்களம்
/
தடம் பதிக்கும் தடகளம்; வீரர்கள் அமர்க்களம்
ADDED : ஆக 11, 2024 12:32 AM

தடகள விளையாட்டில் கால்பதிக்க பலர் தயக்கம் காட்டிய நிலைமாறி, இன்று, தடகளத்தில் சாதனை மேல் சாதனை புரியும் நிலை உருவாகியிருக்கிறது.
ஈட்டி எறிதல், குண்டெறிதல், வட்டெறிதல், சங்கிலி குண்டெறிதல் போட்டிகள் ஆகியவை தடகள விளையாட்டில் இடம் பிடித்துள்ளன. கடந்த, 2021 ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றதையடுத்து, தடகள விளையாட்டின் மீதான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாடு மாநில தடகள சங்கம், அந்தந்த மாவட்ட தடகள சங்கத்தினரின் ஒத்துழைப்புடன், கடந்த, 2 ஆண்டாக மாநில அளவிலான எறிதல் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தாண்டு, திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது; மாநிலம் முழுக்க இருந்து, 320 பேர் பங்கேற்றனர்.
தமிழகம் 'டாப்'
கடந்த, 2002ல், தமிழகத்தில் இருந்து,2 பேர் மட்டுமே ஒலிம்பிக் சென்றனர். பின், 18 ஆண்டு இடைவெளிக்குபின், 2021ல், 5 பேர் சென்றனர். இம்முறை தமிழகத்தில் இருந்து, 6 பேர் ஒலிம்பிக் சென்றுள்ளனர்; இந்திய அளவில் பங்கேற்ற, 29 தடகள வீரர்களில், 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதன் வாயிலாக, தமிழகத்தில் தடகள விளையாட்டு எந்தளவு பிரபலமாகி வருகிறது என்பதை உணர முடியும்.
கடந்த, 5 ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களிலும் தடகளப்போட்டி நடத்துகிறோம். ஒதுக்குப்புறமான கிராமங்களில் இருந்தும் கூட வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு வருகிறோம்.
- லதா, செயலாளர்,தமிழ்நாடு தடகளசங்கம்.
கட்டமைப்பு அவசியம்
திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூனியர், சீனியர் மற்றும் குழந்தைகள் பிரிவில், தடகள போட்டி நடத்தி வருகிறோம். அடித்தட்டு நிலையில் உள்ள திறமைசாலிகளையும் அடையாளம் கண்டு ஊக்குவித்து வருகிறோம். ஏராளமான வீரர்கள், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுத்து வருகின்றனர்.
பல்வேறு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில், மாநில அளவில், 11வது இடத்தில் இருந்து, 5வது இடத்துக்கு திருப்பூர் தடகள சங்கம் முன்னேறியுள்ளது. சிந்தடிக் டிராக் உள்ளிட்ட ஆடுகள கட்டமைப்பை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
- சண்முகசுந்தரம்,தலைவர், திருப்பூர் அதலெடிக் சங்கம்.
அதிகரிக்கும் ஆர்வம்
தீயணைப்பு துறையில் பணி செய்து கொண்டே, ஈட்டி எறிதல் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறேன். சமீபத்தில் நடந்த மாநில போட்டியில், 4ம் இடம் பெற்றேன். அகில இந்திய தீயணைப்பு பிரிவில், முதலிடம் பெற்றுள்ளேன். தற்போது தடகள விளையாட்டில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இருந்த பயிற்சியாளரும் பணியிட மாற்றலாகி சென்றுவிட்ட நிலையில், தனியார் பயிற்சியாளர் மூலமே பயிற்சி பெறுகிறேன்.
தற்போது தடகள விளையாட்டை ஊக்குவிக்க, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.
- ராகுல், தடகள வீரர்,திருப்பூர் தீயணைப்பு நிலைய ஊழியர்.