/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரையாடுகள் கணக்கெடுக்க வனத்துறையினருக்கு பயிற்சி
/
வரையாடுகள் கணக்கெடுக்க வனத்துறையினருக்கு பயிற்சி
ADDED : ஏப் 21, 2025 05:49 AM

உடுமலை : திருப்பூர் வனக்கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி, வரும், 24ல் துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தின் மாநில விலங்காகவும், சங்க கால இலக்கியங்களில் 'வருடை' என குறிப்பிடப்படும், வரையாடுகள் உள்ளன. இந்த இனத்தை காக்கும் வகையில், தமிழக அரசு, 2023ம் ஆண்டு முதல் வரையாடுகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கேரளா மாநிலம், இரவிகுளம், முக்குறுத்தி பகுதிகளில் காணப்படும் வரையாடுகள் குறித்து கடந்தாண்டு, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 1,031 வரையாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.
நடப்பாண்டு, தமிழகம் மற்றும் கேரளா மாநிலம் இணைந்து, வரும், 24 முதல், 27ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. தமிழகம், கேரள மாநிலத்தில், 14 வனக்கோட்டங்களில், 46 வனச்சரகங்களில், 176 பகுதிகளில் இக்கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதில், வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, 550 பேர் பங்கேற்க உள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 59 பகுதிகளில், கணக்கெடுப்பு நடக்கிறது. கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம், உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது. வரையாடுகள் திட்ட இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் கணேஷ்ராம் ஆகியோர் பயிற்சி அளித்ததோடு, தேவையான குறிப்பேடுகள், உபகரணங்கள் வழங்கினர்.