/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விரிவாக்கம் செய்யப்படாத பாலங்கள்; விபத்து அபாயம்
/
விரிவாக்கம் செய்யப்படாத பாலங்கள்; விபத்து அபாயம்
ADDED : ஆக 11, 2025 11:06 PM
உடுமலை; உடுமலை பகுதியில், பாசன கால்வாய்கள் மீது கட்டப்பட்ட பாலங்கள், நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல், இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உடுமலை பகுதியில், தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் மற்றும் கிராமப்புற ரோடுகளின் குறுக்கே, பாசன கால்வாய்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக, பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் பிரதான, கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள், ரோடுகளில், குறுக்கிடும் இடத்தில், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இப்பாலங்கள் பாசனத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போது, அப்போதிருந்த, ரோட்டின் அகலத்துக்கேற்ப கட்டப்பட்டவையாகும்.
அதன்பின்னர், ரோடுகள் பல மடங்கு விரிவுபடுத்தப்பட்ட பிறகும், பாலங்கள் அதற்கேற்ப மேம்படுத்தப்படவில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்ட பிறகு, எஸ்.வி., மில் வாய்க்கால் பாலம் உட்பட பாலங்கள், நீண்ட இழுபறிக்குப்பிறகு, விரிவாக்கப்பட்டது. ஆனால், கிராமப்புற ரோடுகளில், இப்பாலங்களை இரு துறையினரும் கண்டுகொள்வதில்லை.
பி.ஏ.பி., பூலாங்கிணறு, புதுப்பாளையம், உடுமலை ஆகிய கால்வாய்களின் குறுக்கே, மேம்படுத்தப்படாமல், 20க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன.
விபத்துகளை குறைக்க, ரோட்டின் அகலத்துக்கேற்ப, பாலங்களை விரிவுபடுத்த வேண்டும். உடனடி நடவடிக்கையாக சேதமடைந்துள்ள தடுப்பு சுவர்களையாவது சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையினர், சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து பணிகளை துவக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.