/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் கூடுதல் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கணும் :ஒன்றிய நிர்வாகம் தீவிரம் காட்ட வலியுறுத்தல்
/
ஊராட்சிகளில் கூடுதல் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கணும் :ஒன்றிய நிர்வாகம் தீவிரம் காட்ட வலியுறுத்தல்
ஊராட்சிகளில் கூடுதல் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கணும் :ஒன்றிய நிர்வாகம் தீவிரம் காட்ட வலியுறுத்தல்
ஊராட்சிகளில் கூடுதல் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கணும் :ஒன்றிய நிர்வாகம் தீவிரம் காட்ட வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2024 11:45 PM
உடுமலை:உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, கூடுதல் துாய்மைப்பணியாளர்கள் நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி நெருக்கமாக உள்ள வீடுகளில், 150 வீடுகளுக்கு ஒருவராகவும், இடைவெளி அதிகமுள்ளதில் 75 வீடுகளுக்கு ஒருவராகவும் நியமிக்கப்பட்டனர்.
முன்பு தேசிய உறுதி வேலை உறுதி திட்டத்தின் கீழ், துாய்மைப்பணியாளர்கள் சுழற்சி முறையில் ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் வாயிலாக, அவர்களுக்கு பணி நாளுக்கான ஊதியமும் வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது மகளிர் திட்டத்தின் கீழ், நிரந்தர ஊதியமாக, ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தற்போது ஊராட்சிகளில், குடியிருப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, நகரிலிருந்து அருகில் உள்ள கிராமங்களில், ஆண்டுதோறும் குடியிருப்புகள் அதிகரிக்கின்றன. அதற்கேற்ப அடிப்படை சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் கழிவுகளிலிருந்து, இயற்கை உரம் தயாரிப்பது வரை துாய்மைப்பணியாளர்களின் பணியாக உள்ளது. ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே, கழிவுகள் முறையாக சேகரிக்கப்படுகிறது.
பெரும்பான்மையான கிராமங்களில், குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. குறிப்பாக பணியாளர்கள் பற்றாக்குறையால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கழிவுகளை சேகரிக்க வேண்டியுள்ளது.
இதனால் பொதுமக்கள் நேரடியாகவே திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுகின்றனர். கிராமங்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
கூடுதல் துாய்மைப்பணியாளர்கள் நியமிப்பதில், ஒன்றிய நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விரைவில் நடவடிக்கை
ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'தற்போதுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் துாய்மைப்பணியாளர்கள் நியமிப்பதற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து கேட்கப்பட்டும் வருகிறது. பணியாளர்கள் நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.