/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாசன குளங்களில் கழிவு நீர் கலப்பு; நிரந்தர தீர்வு எப்போது?
/
பாசன குளங்களில் கழிவு நீர் கலப்பு; நிரந்தர தீர்வு எப்போது?
பாசன குளங்களில் கழிவு நீர் கலப்பு; நிரந்தர தீர்வு எப்போது?
பாசன குளங்களில் கழிவு நீர் கலப்பு; நிரந்தர தீர்வு எப்போது?
ADDED : டிச 12, 2024 05:52 AM
உடுமலை; செங்குளம் மற்றும் தினைக்குளம் உட்பட குளங்களில், அருகிலுள்ள கிராமங்களின், சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
உடுமலை அருகே பள்ளபாளையத்தில், ஏழு குள பாசன திட்டத்திற்குட்பட்ட செங்குளம் அமைந்துள்ளது. குளத்தின் நீர் தேக்க பரப்பு, 74.84 ஏக்கராகவும், நேரடியாக, 285 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. செங்குளத்தின் அருகில், பள்ளபாளையம் கிராமம் அமைந்துள்ளது.
ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இக்கிராமத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும், மேற்குப்பகுதியில், ஒருங்கிணைந்து, செங்குளத்திற்கு, தண்ணீர் செல்லும் மழை நீர் வடிகாலில் இணைகிறது.அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கிராமத்தின் திடக்கழிவுகளும், செங்குளத்தின், நீர் தேக்க பரப்பில் வீசப்படுகின்றன. திருமூர்த்தி அணையிலிருந்து, ஏழு குள பாசன திட்ட குளங்களுக்கு, தண்ணீர் திறக்கப்பட்டு, குளங்கள் நிரம்பி வருகின்றன.செங்குளத்தில், தண்ணீர் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இந்நிலையில், கழிவு நீர் நேரடியாக குளத்தில், கலப்பதால், தண்ணீர் மாசடைந்து, சாகுபடியில், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள், ஷட்டர் மற்றும் விளைநிலத்திலுள்ள மடைகளில் அடைத்து கொள்வதுடன், மண் வளத்தையும் பாதிக்கிறது. மாசடையும் தண்ணீரால், பறவைகளும் பாதிக்கப்படும் என்பதால், கழிவு நீர் கலப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்குளத்திற்கு அருகிலுள்ள, தினைக்குளத்திலும், தளி பேரூராட்சி கழிவுகள் நேரடியாக கலந்து வருகின்றன. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், ஏழு குள பாசன குளங்களின் அருகில் அமைந்துள்ள கிராமங்களின் கழிவு நீர் குளங்களில் கலக்காமல் இருக்க, சிறப்பு திட்டத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.