/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாய்கிறது' தண்ணீர்: வாட்டுகிறது வறட்சி! பி.ஏ.பி., கடைமடையில் நடப்பது என்ன?
/
'பாய்கிறது' தண்ணீர்: வாட்டுகிறது வறட்சி! பி.ஏ.பி., கடைமடையில் நடப்பது என்ன?
'பாய்கிறது' தண்ணீர்: வாட்டுகிறது வறட்சி! பி.ஏ.பி., கடைமடையில் நடப்பது என்ன?
'பாய்கிறது' தண்ணீர்: வாட்டுகிறது வறட்சி! பி.ஏ.பி., கடைமடையில் நடப்பது என்ன?
ADDED : ஆக 06, 2025 12:39 AM

திருப்பூர்; 'நிரம்பிய அணைகளில் இருந்து நிறைவாக திறந்து விடப்படும் நீர், கடைமடைக்கு வந்து சேர்வதில் பற்றாக்குறை நிலவுகிறது; சரிசம நீர் வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்,' என, பி.ஏ.பி., கடைமடை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
பி.ஏ.பி., எனப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்பாசன திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் உள்ள விவசாயிகள் பி.ஏ.பி., பாசன கால்வாய் வாயிலாக பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 'பி.ஏ.பி., கால்வாயில் திறந்துவிடப்படும் நீர், கடைமடைக்கு போதியளவில் வந்து சேர்வதில்லை' என, கடைமடை விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காவது பாசன மண்டல பகுதிகளில் பாசனத்திற்காக, பிரதான கால்வாயில், கடந்த மாதம், 27ம் தேதி நீர் திறந்து விடப்பட்டது.
'வரும், டிச., 9ம் தேதி வரை, ஐந்து மாதத்திற்கு, நீர் வெளியேற்றம் தொடரும்' எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்காம் மண்டலத்தில், கடைமடையில் உள்ள, 12 ஆயிரம் ஏக்கருக்கு நீர் வினியோகிப்பதில் பெரும் குளறுபடி நிலவுகிறது எனவும், விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., மற்றும் பொள்ளாச்சி, பரம்பிக்குளம் ஆழியாறு படுகை வட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் வழங்கிய மனு:
வெள்ளகோவில் கிளை கால்வாய் வாயிலாக பாசனம் செய்யப்படும் பகுதிகள், நீர் வெளியேற்ற கணக்கீடுகளின் அடிப்படையில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. பி.ஏ.பி., சட்டம், சமமான நீர் வினியோகத்தை குறிப்பிடுகிறது என்றாலும், காங்கயம் உபகோட்டத்தில் பாயும் அளவைவிட, பொங்கலுார் உட்கோட்டத்தில் நீர் எடுப்பு மிக அதிகமாக இருந்தது.
பொங்கலுார் உட்கோட்டத்தில் நீர் எடுப்புகள், மண்டலம் அல்லாத மற்றும் ஆயக்கட்டு அல்லாத பகுதிகளுக்கு வழங்கப்படும் அதிகப்படியான நீர் எடுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அணைகளில் ஏராளமான நீர் இருப்பு இருந்த போதிலும், காங்கயம் - வெள்ளகோவில் பகுதியில் வறட்சி தொடர்கிறது. நிலைமையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட உதவியுடன் தீர்வு காண்பதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.