ADDED : ஜன 25, 2026 06:41 AM
பொங்கலுார்: திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டல பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட இருந்தது.
தண்ணீர் திறப்புக்கு முன் பத்து கோடி ரூபாய் செலவில் வாய்க்கால் பராமரிப்பு பணிகள் துவங்கியது. ஆனால், பல இடங்களில் காரை வாய்க்கால் மறைந்து, மண் மேடுகளாக காட்சியளிக்கிறது.
பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை வாய்க்காலில் கொட்டுகின்றனர்.
இதனால் துார்வாருவது சவாலான பணியாக மாறி உள்ளது. இதுதவிர, வாய்க்கால் பணிக்கு தொழிலாளர்கள் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் நேற்றுடன் முடிய வேண்டிய பணி இன்னும் முடியாமல் ஜவ்வாக இழுக்கிறது.
இதனால், தண்ணீர் திட்டமிட்டபடி திறக்க வாய்ப்பில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பி.ஏ.பி. நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சியால், பத்து நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்தது.
இதனால், முதல் மண்டல பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களை காப்பாற்றி வருகின்றனர்.
பாசனம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்போது தான் முதல் மண்டல பாசனத்துக்கு முழுமையாக ஐந்து சுற்று தண்ணீர் கிடைக்க உள்ளது.
நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் தண்ணீர் திறப்பு தள்ளிப் போவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பி.ஏ.பி. பொங்கலுார் வட்டார பகிர்மான குழு தலைவர் தெய்வசிகாமணி கூறுகையில், ''திட்டமிட்டபடி வேலை முடியவில்லை. ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் வரும், 28ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது,'' என்றார்.

