/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எந்த ஸ்கூல்ல படிக்கிற தம்பி'.. மனு அனுப்பிய 55 வயது நபர்; ஊழியர் கேள்வியால் அதிர்ச்சி
/
'எந்த ஸ்கூல்ல படிக்கிற தம்பி'.. மனு அனுப்பிய 55 வயது நபர்; ஊழியர் கேள்வியால் அதிர்ச்சி
'எந்த ஸ்கூல்ல படிக்கிற தம்பி'.. மனு அனுப்பிய 55 வயது நபர்; ஊழியர் கேள்வியால் அதிர்ச்சி
'எந்த ஸ்கூல்ல படிக்கிற தம்பி'.. மனு அனுப்பிய 55 வயது நபர்; ஊழியர் கேள்வியால் அதிர்ச்சி
ADDED : டிச 23, 2024 07:05 AM
திருப்பூர் : 'முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பும் மனுக்கள் மீது நுாறு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்' என்பது அறிவிப்பாகவே நிற்கிறது. இரண்டு ஆண்டுகள் முன்பு அனுப்பிய மனு தொடர்பாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போனில் அழைத்து பேசிய ஊழியர், 'தம்பி... நீ எந்த ஸ்கூல்ல படிக்கிற' என மனு அனுப்பிய 55 வயது நபரிடம் கேட்டதால் அதிர்ச்சியடைந்தார்.
திருப்பூர் முதலிபாளையத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர், 2021ல், '2019ம் ஆண்டில் முதலிபாளையம் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பயன்பாட்டில் இல்லை. இதை முறைப்படுத்த வேண்டும்' என்று முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார். கடந்த 2017 முதல், திருப்பூர் மாநகராட்சி குப்பை மற்றும் கேபிள் பிரச்னை தொடர்பாகவும் தொடர்ந்து மனுக்கள் அளித்துள்ளார். மனுக்கள் தலைமை செயலர், கலெக்டர், மேயர், கமிஷனர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 19ம் தேதி திருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி அரசு துறை பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு முந்தைய வாரம் முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில் நிலுவையில் உள்ள மனுக்கள் நிலை குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டது. நிலுவை மனுதாரர்களைத் தொடர்பு கொண்டு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கேட்டறிந்தனர்.பால்பாண்டியை போனில் தொடர்பு கொண்ட பெண் ஊழியர், 'தம்பி...(பால்பாண்டிக்கு தற்போது வயது 55) நீ எந்த வகுப்பு... எந்த ஸ்கூலில் படிக்கிறாய்' என்று விசாரிக்க அவரோ அதிர்ச்சியடைந்து, 'நான் படிக்கவில்லை.
நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள்?' என்று கேட்கிறார். 'கலெக்டர் ஆபீசிலிருந்து பேசுறோம். நீங்கள் அனுப்பிய மனுவில், முகவரி குடிமங்கலம் என்று உள்ளது. புகார் தெரிவிக்கப்பட்ட முதலிபாளையம் என்ற ஊரே திருப்பூர் மாவட்டத்தில் இல்லை. எந்த ஊரில் மைதானம் கட்ட வேண்டும்' என்று பெண் ஊழியர் கேட்கிறார்.
பால் பாண்டி கூறியதாவது:
கடந்த 2017 முதல் கடந்த மார்ச் மாதம் வரை நான் அனுப்பிய மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த வாரம், திருப்பூர் எஸ்.பி., அலுவலகம், காங்கயம் டி.எஸ்.பி., அலுவலகம், ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷன், சென்னை முதல்வர் தனிப்பிரிவு என மாற்றி மாற்றி அழைத்து பேசினர். மாநகராட்சி பிரச்னை குறித்த புகார்கள் எப்படி போலீஸ் பிரிவுக்கு செல்கிறது? யார் எப்படி இதை அணுகி தீர்வு ஏற்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. திருப்பூர் அருகில் உள்ள ஊர் முதலிபாளையம். ஆனால், மாவட்டத்திலேயே இல்லை என்று கேட்கிறார் ஊழியர். மனுக்கள் சுற்றி சுற்றி வருகிறதே தவிர தீர்வு ஏற்படவில்லை. இது மனுதாரர்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் சலிப்பை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.