/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மன்றங்களை எதற்கு துவக்கினாங்க! செயல்பாடு இல்லாமல் முடங்கியதால் வேதனை
/
ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மன்றங்களை எதற்கு துவக்கினாங்க! செயல்பாடு இல்லாமல் முடங்கியதால் வேதனை
ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மன்றங்களை எதற்கு துவக்கினாங்க! செயல்பாடு இல்லாமல் முடங்கியதால் வேதனை
ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மன்றங்களை எதற்கு துவக்கினாங்க! செயல்பாடு இல்லாமல் முடங்கியதால் வேதனை
ADDED : நவ 17, 2024 10:01 PM
உடுமலை ; கிராமப்பகுதியிலுள்ள விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு துவக்கப்பட்ட, ஊராட்சி விளையாட்டு மன்றங்கள் செயல்பாடில்லாமல் உள்ளதால், விளையாட்டு ஆர்வலர்களும், இளைஞர்களும் வேதனையில் உள்ளனர்.
தமிழக அரசு, கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வீரர்களின் திறன்களை ஊக்குவிப்பதற்கு, விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்களை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் வழங்கியது.
இத்திட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும், 'ஊராட்சி விளையாட்டு மன்றம்' அமைக்கப்பட வேண்டும்.அதன் தலைவராக ஊராட்சித்தலைவரும், மற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் விளையாட்டில் திறமையுள்ள வீரர்கள், ஊராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சி பெறலாம்.
அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் உபகரணங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கும், முறையாக இருப்பு வைப்பதற்கும், விளையாட்டு பயிற்சி தொடர்ந்து நடப்பதை கண்காணித்து அதற்கான சிறப்பு கூட்டம் நடத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாவட்ட அளவிலும் அதற்கான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும், அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்வதற்கான இடம் தேர்வு செய்து, ஊராட்சி நிர்வாகத்தினர் பயிற்சி நடப்பதை கண்காணிக்கவும் வழிமுறை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஊராட்சியிலும், மக்கள் தொகை அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள, 38 ஊராட்சிகளுக்கு மொத்தமாக 59 செட்களும், மடத்துக்குளத்தில் உள்ள 11 ஊராட்சிகளுக்கு 18 செட்களும், குடிமங்கலத்தில் உள்ள 23 ஊராட்சிகளுக்கு 32 செட்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் இவ்வாறு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை ஊராட்சிகளில், திட்ட வழிகாட்டுதலின்படி விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி என எதுவும் நடக்கவில்லை. உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது. இதனால், விளையாட்டு ஆர்வலர்களும், இளைஞர்களும் வேதனையில் உள்ளனர்.
முக்கியத்துவம் அளிக்கணும்
விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்கள், இதுவரை அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை.
மேலும் விளையாட்டு பயிற்சிக்கென குறிப்பான இடமும், பல கிராமங்களில் இல்லை. அரசு திட்டங்கள் அறிவித்து, அதற்கான வசதிகளை செய்தாலும், அவை முழுமையாக மக்களை சென்றடைவதில்லை.
ஊராட்சிகளின் விளையாட்டு மன்றத்துக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெற உள்ளதால், தன்னார்வலர்களை உள்ளடக்கிய குழு அமைத்து, விளையாட்டு மன்றங்களை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.