ADDED : அக் 14, 2025 12:45 AM
பல்லடம்:பல்லடம் வழக்கறிஞர் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
பல்லடம் கோர்ட்டில், வழக்குகள் அதிக அளவில் வருவதால், நீண்டகாலமாக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பல்லடத்துக்கு கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றமும், கூடுதல் மாவட்ட நீதிமன்றமும் தேவைப்படுகிறது. காரணம், தற்போது செயல்பட்டு வரும் பல்லடம் சார்பு நீதிமன்றத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும். பத்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புடைய வழக்குகள் மற்றும் கொலை வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரிக்க கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு, போதிய பார்க்கிங் வசதி கிடையாது. கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கவும், பார்க்கிங் வசதிக்காகவும், அதிக இடம் தேவைப்படுவதால், ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள கிளை சிறை இடத்தை வழங்க வேண்டும் என, அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தற்போதுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட, எதிர்காலத்தில் அமைக்கப்படும் கூடுதல் நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் அமையும். தேவையற்ற அலைச்சல், பார்க்கிங் பிரச்னை இருக்காது.