/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமான மல்பெரி இலை கிடைக்க பணி தீவிரம்
/
தரமான மல்பெரி இலை கிடைக்க பணி தீவிரம்
ADDED : மே 10, 2025 02:11 AM
உடுமலை : கோடை காலத்திலும், தரமான மல்பெரி இலைகளை உற்பத்தி செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில், வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது. தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு, மல்பெரி இலைகளே முக்கிய ஆதாரமாக அமைகிறது.
உடுமலை பகுதியில், இந்தாண்டு முன்னதாகவே துவங்கிய கோடை வெயில் காரணமாக, மல்பெரி செடிகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டது. கோடை கால மழைக்கு பிறகு காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
அதிக வெப்பம் காரணமாக, மல்பெரி செடிகள் பாதிக்காமல் இருக்க பல்வேறு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தரமான மல்பெரி இலைகள் உற்பத்திக்கு, செடிகளுக்கு இடையில், மூடாக்கு அமைக்கின்றனர். இதனால், பாசன நீர் விரைவாக ஆவியாவது தவிர்க்கப்படுகிறது; களைகளும் அதிகம் முளைப்பதில்லை.
மேலும், செடிகளுக்கு மாலை நேரத்தில் நீர்ப்பாசனம் செய்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோடை காலத்தில், அறுவடை செய்த மல்பெரி இலைகளை ஈரச்சாக்கு கொண்டு மூடி பாதுகாப்பதால், அவை விரைவாக காய்வது தவிர்க்கப்படுகிறது; புழு வளர்ப்பு மனைகளின் மீது தண்ணீர் தெளித்தும் நிலையை சமாளித்து வருவதாகவிவசாயிகள் தெரிவிக்கின்றனர்.