/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விண்ணப்பித்தோருக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு பணிகள் தீவிரம்
/
விண்ணப்பித்தோருக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு பணிகள் தீவிரம்
விண்ணப்பித்தோருக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு பணிகள் தீவிரம்
விண்ணப்பித்தோருக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு பணிகள் தீவிரம்
ADDED : மார் 03, 2026 05:57 AM
உடுமலை: பொங்கல் பண்டிகையின்போது நிறுத்தப்பட்ட ரேஷன் கார்டு அச்சிடும் பணி, திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் துவங்கியுள்ளது; ஜனவரி வரை நிலுவையில் உள்ள, 2300 புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டுவருகின்றன.
கடந்த ஜன. 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி - சேலை மற்றும் மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், 8 லட்சத்து 2 ஆயிரம் கார்டுதாரர்கள் பயனாளியாக சேர்க்கப்பட்டு, பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டதால், அனைத்து மாவட்டங்களிலும், கடந்த ஜனவரி மாதம் முதல், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அந்தந்த தாலுகாக்களின் வட்ட வழங்கல் அலுவலரின் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அரசிடமிருந்து உத்தரவு வராததால், புதிய கார்டு அச்சிடப்படவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் காலத்தில் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி நிறுத்தப்படும். கடந்த ஜனவரி மாதம் வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கான புதிய ரேஷன் கார்டுகளை அச்சிட்டு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாக, முதல் தளத்திலுள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி துவங்கியுள்ளது. ஜனவரி மாதம் வரையில் விண்ணப்பித்த, மொத்தம் 2, 300 குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.
நாளொன்றுக்கு, 500 கார்டுகள் வீதம், அச்சிடப்பட்டு வருகிறது. விரைவில், தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக, குடிமைப்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

