/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரலாறு படைப்பவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தல்
/
வரலாறு படைப்பவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தல்
வரலாறு படைப்பவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தல்
வரலாறு படைப்பவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தல்
ADDED : ஜன 01, 2026 05:33 AM

உடுமலை: ''வரலாற்றைப் படிப்பவர்களாக இல்லாமல், வரலாற்றைப் படைப்பவர்களாக மாறவேண்டும்'' என உடுமலை அரசு கலைக் கல்லூரி, 50வது பட்டமளிப்பு விழாவில், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசினார்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 50வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியின் முதல்வர் கிருஷ்ணன், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது : மாணவர்கள், பெற்றோருக்கும், கல்வியைக் கற்றுக்கொடுத்த கல்லூரி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில், செயலாற்ற வேண்டும்.
அகில இந்திய அளவில், முதல் நுாறு இடங்களில் இடம் பெறும் வகையில், அரசு கலைக்கல்லூரிகளின் தரம் உயர்ந்து உள்ளது. அனைத்துத்துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பெருகி உள்ளன.
முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும் என எண்ணாமல், குறிக்கோள் நிறைவேறும் வரை முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களோடு வாழவேண்டும். விரும்பியது முளைக்காது; விதைத்தவைகள் மட்டுமே முளைக்கும்.
நல்ல எண்ணங்கள் தான் செயலுக்குத்துாண்டுகோலாக அமைகின்றன. வரலாற்றினைப் படிப்பவராக இல்லாமல் வரலாற்றைப் படைப்பவராக மாறவேண்டும்.
வாய்ப்புகள் வரும்பொழுது அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தொடர்புச் சாதனங்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். அறிவைப் பெருக்குவதற்கு உரிய ஆயுதங்களாகத் தகவல் தொடர்பு சாதனங்கள் விளங்குகின்றன.
வெறும் பொழுது போக்கு சாதனங்களாக மட்டுமே அவற்றைக் கருதக்கூடாது.
தடம்பார்த்து நடக்கும் சாதாரண மனிதனாக இல்லாமல், என்றும் அழியாத வகையில் தடம் பதித்துவிட்டுச் செல்லும் மாமனிதர்களாக மாறவேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
இதில், இளநிலைப் பாடப்பிரிவில், 572 மாணவ, மாணவியருக்கும், முதுநிலைப் பாடப் பிரிவில், 186 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, தரநிலை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பல்கலை அளவில், இளநிலை புள்ளியியல் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி பாண்டீஸ்வரி, தாவரவியலில், 3ம் இடம் பெற்ற லிடியா, இளநிலை மின்வணிகம், 3ம் இடம் உதயமலர், இளநிலை வேதியியலில் 6ம் இடம் பெற்ற பொன்ஜீவகன், இயற்பியல் பாடத்தில், 7ம் இடம் பெற்ற அர்ஷ்மா, இளம் தமிழ் இலக்கியப் பாடத்தில், 10ம் இடம் பெற்ற சத்தியசுப்ரபானு, இளநிலை தாவரவியலில் 10ம் இடம் பெற்ற ரமணி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
முதுநிலை வேதியியல் பாடத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற கிஷோர், முதுநிலை புள்ளியியல் பாடத்தில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் பெற்ற சந்தியா, முதுநிலை சுற்றுலா மேலாண்மைப் பாடத்தில், 2ம் இடம் பெற்ற பத்மநாதன், முதுநிலை பொருளியல் பாடத்தில், 5ம் இடம் பெற்ற அபிதா, முதுநிலை இயற்பியல் பாடத்தில், 10ம் இடம் பெற்ற அனீஸ்பாத்திமா ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவை வேதியியல் துறைத்தலைவர் சிவக்குமார் ஒருங்கிணைத்தார்.

