/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பர்வதமலை கோவிலில் கஞ்சா படையலிட வந்த வாலிபர்கள்
/
பர்வதமலை கோவிலில் கஞ்சா படையலிட வந்த வாலிபர்கள்
ADDED : ஜூன் 20, 2024 02:07 AM
கலசப்பாக்கம்:கலசப்பாக்கம் அருகே, தென்மகாதேவமங்கலம் கிராமத்தில், 4,560 அடி உயர மலை உச்சியில் உள்ள மல்லிகார்ஜூனேஸ்வரருக்கு கஞ்சா படையலிட வந்த, 6 வட மாநில வாலிபர்களை, வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில், 4,560 அடி உயர மலை உச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான, பிரம்மராம்பிகை அம்மன் உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு பக்தர்களே அபிஷேகம், பூஜை செய்து வழிபடுவதால், பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் இரவில் தங்கி வழிபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, 6 வடமாநில வாலிபர்கள் மலை அடிவாரத்தில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தனர். அவர்களிடம் வனத்துறையினர் விசாரணையில், வட மாநிலங்களிலுள்ள சிவாலயங்களில், கஞ்சா படையலிடுவது வழக்கம். அதுபோன்று, இங்குள்ள மல்லிகார்ஜூனேஸ்வரருக்கு கஞ்சா படையலிட வந்தோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர், அதுபோன்ற நடைமுறை இங்கு கிடையாது. இதுபோன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.