/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பெண் கழுத்தறுத்து கொலை சென்னையில் சாமியார் கைது
/
பெண் கழுத்தறுத்து கொலை சென்னையில் சாமியார் கைது
ADDED : செப் 22, 2024 03:28 AM
ஆரணி:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி அலமேலு, 50. இந்த தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சுப்பிரமணி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகன்கள், மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். அலமேலு தனியாக வசித்தார்.
அதே பகுதியில் எதிர் வீட்டில் வசித்த சாமியாரான தக்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அலமேலுவும் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து சாமியார் போல சுற்றி வந்தார்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வதும், ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபடுவதுமாக இருந்தார். இரு தினங்களுக்கு முன், இருவரும் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர். கடந்த 19ம் தேதி அலமேலு கண்ணமங்கலம் அருகே உள்ள ஏரிக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
தக்சனும், அலமேலுவும் ஒன்றாக வந்தது கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து சென்னை, குன்றத்துார் ஆசிரமத்தில் பதுங்கி இருந்த தக்சனை போலீசார் கைது செய்தனர். அவரை கண்ணமங்கலத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தக்சன் அளித்த வாக்குமூலம்:
தனிமையில் இருந்த அலமேலு, என்னிடம் சாமிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு சேர்ந்தார். இருவரும் கோவில் குளங்களுக்கு சென்று வழிபட்டு வந்தோம். அப்போது, அலமேலு, 'எனக்கு முக்தி கிடைக்க வேண்டும். அப்படியானால் திருவண்ணாமலை ஆன்மிக ஸ்தலத்தில் என் உயிர் போக வேண்டும்' என, கூறினார்.
இதையடுத்து அலமேலுவை கண்ணமங்கலம் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று, 'இதுவும் திருவண்ணாமலை மாவட்டம் தான்' எனக்கூறி, அவரது கழுத்தை அறுத்தேன். அவர் துடிதுடித்து இறந்தார்.
இவ்வாறு தக்சன் கூறினார்.
போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.