/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பேட்ரோல் போலீஸாருக்கு முதலுதவி பயிற்சி : விபத்தில் இறப்பை குறைக்க டி.ஐ.ஜி., திட்டம்
/
பேட்ரோல் போலீஸாருக்கு முதலுதவி பயிற்சி : விபத்தில் இறப்பை குறைக்க டி.ஐ.ஜி., திட்டம்
பேட்ரோல் போலீஸாருக்கு முதலுதவி பயிற்சி : விபத்தில் இறப்பை குறைக்க டி.ஐ.ஜி., திட்டம்
பேட்ரோல் போலீஸாருக்கு முதலுதவி பயிற்சி : விபத்தில் இறப்பை குறைக்க டி.ஐ.ஜி., திட்டம்
ADDED : ஜூலை 13, 2011 02:23 AM
திருச்சி: திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நடக்கும் சாலை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், பேட்ரோல் வாகன போலீஸாருக்கு முதலுதவி பயிற்சி அளிக்க டி.ஐ.ஜி., அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி போலீஸ் டி.ஐ.ஜி.,யின் கட்டுப்பாட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்கள் வருகிறது. மேற்கண்ட மாவட்டங்களில கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நடந்த விபத்துக்களில் 689 பேர் இறந்துள்ளனர். 2,061 பேர் காயமடைந்துள்ளனர். இதில், திருச்சி மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 240 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க போலீஸாரும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் பெரிய அளவில் பலனளிக்கவில்லை.
தற்போது மேற்கண்ட மாவட்டங்களில் சாலை போக்குவரத்தை கண்காணிக்க மட்டும் 15 'பேட்ரோல்' வாகனங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு எஸ்.ஐ., நான்கு ஏட்டுகள் மற்றும் ஒரு டிரைவர் இருப்பார்கள். பேட்ரோல் வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சாலை போக்குவரத்தை 24 மணிநேரமும் கண்காணிக்கவேண்டும் என்பதே பணியாகும். சாலைகளில் விபத்துக்குள் ஏற்படும் போது, விபத்துக்களால் ஏற்படும் உயிர்ப்பலிகள் போலவே, விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? என்று தெரியாமல் நடக்கும் பணியிலும், அவர்களுக்கு காலதாமதமாக கிடைக்கும் முதலுதவியாலும் நிறைய பேர் இறக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத்தடுக்க திருச்சி டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்றுள்ள அமல்ராஜ் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதாவது, திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பேட்ரோல் வாகனங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறை, முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறை, முதலுதவி பெட்டியில் உள்ள மருந்துகளை எப்படி எடுத்து பயன்படுத்துவது? ஆகியவை குறித்து பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக புனித 'ஆன்ஸ்' ஆம்புலன்ஸ் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் தான் பேட்ரோல் வாகன போலீஸாருக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
முதல்கட்ட பயிற்சி வரும் 20ம் தேதி திருச்சி போலீஸ் பயிற்சி மையத்தில் துவங்குகிறது. 20 முதல் 25 பேர் வரை ஒருநாள் பயிற்சி முகாமில் பங்கேற்பர். அவர்களுக்கு விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, முதலுதவி பெட்டி மருந்துகளை கையாளுவது குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு பல பிரிவுகளாக அனைத்து போலீஸாருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி முகாம் தொடர்ந்து நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.விபத்தில் சிக்குபவர்களை மீட்கும் போலீஸாருக்கு தொற்றுநோய் பரவாமல் இருக்கவும், அவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் வகையிலும், பேட்ரோல் வாகன போலீஸாருக்கு கையுறை வழங்கவும் டி.ஐ.ஜி., அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை டி.எஸ்.பி., கமலா செய்து வருகிறார்.

