/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஸ்ரீரங்கம் காவிரி வடிகால் அரிப்பு சீரமைப்பு
/
ஸ்ரீரங்கம் காவிரி வடிகால் அரிப்பு சீரமைப்பு
ADDED : நவ 21, 2024 01:44 AM

திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் உபரிநீர், காவிரி பாலத்தின் மேல்புறம் வழியாக பாய்ந்தோடி, காவிரி ஆற்றில் கலக்கும் வகையில், வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஸ்ரீரங்கம் பகுதியில் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர், வடிகால் வழியாக, காவிரி ஆற்றில் கலந்தபோது, மாம்பழச் சாலையை ஒட்டிய பகுதியில் பாலத்தின் அருகே, மணல் அரிப்பை ஏற்படுத்தியது. பாலத்தை ஒட்டிய அணுகு சாலை பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, வடிகால் வாய்க்கால் மற்றும் பாலத்தை ஒட்டிய கரைப்பகுதியை பலப்படுத்தும் வகையில், மரங்கள் நட்டு, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
காவிரி பாலத்தை ஒட்டிய வடிகால் வாய்க்கால் கரைப்பகுதியில், 70 மீட்டர் நீளத்திற்கு வலுவூட்டும் பணி நிறைவடைந்துள்ளது. பாலம் பாதுகாப்பாக உள்ளது.
வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாலும், காவிரி ஆற்றில் அதிக அளவு நீர்வரத்து இருக்கும் என்பதாலும், இப்போது, கரையை பலப்படுத்துவது, பாலத்துக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
தற்போது உள்ள பழைய காவிரி பாலத்தின் அருகே, 106 கோடி ரூபாயில், புதிய நான்கு வழி பாலம் அமைக்கப்பட உள்ளது. புதிய பாலம் கட்டும்போது, மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதி நிரந்தரமாக சரி செய்யப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

