ADDED : செப் 28, 2025 03:09 AM
திருச்சி:திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி, காவலரை தள்ளிவிட்டு தப்பி ஓடினார்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை சேர்ந்தவர் பிரவீன், 34. பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவர், சில வாரங்களுக்கு முன், புதுக்கோட்டையில் ஓர் ஆட்டோவை திருடிக்கொண்டு, அதே ஆட்டோவில் திருச்சி வந்தார்.
ஜங்ஷன் ரயில் நிலைய பகுதியில், ஒரு பயணியின் மொபைல் போனை பறிக்க முயன்ற போது, போலீசாரிடம் சிக்கினார். திருச்சி, கன்டோன்மென்ட் போலீசார், அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம், சிறையில் இருந்த பிரவீன், காது வலிப்பதாக கூறியதால், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை, உணவு வழங்குவதற்காக, பிரவீன் தங்கியிருந்த அறை கதவை சிறைக்காவலர் திறந்த போது, அவரை தள்ளி விட்டு, பிரவீன் தப்பினார். சிறைக்காவலர் புகாரில், அரசு மருத்துவமனை போலீசார், பிரவீனை தேடி வருகின்றனர்.