ADDED : செப் 20, 2011 01:32 AM
வேலூர்: வேலூர் அரசு பெண்லண்ட் மருத்துவனையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மருக்கு, பெயிண்ட் அடிக்க ரவி என்ற காண்ட்ராக்டர் டெண்டர் எடுத்திருந்தார்.
கடந்த 3ம் தேதி பராமரிப்பு பணிகள் செய்வதற்காக, மின் சப்ளை நிறுத்தப்பட்டிருந்தது. அன்று ரவி, காரையைச் சேர்ந்த சேட்டு, சம்பங்கி நல்லூரைச் சேர்ந்த சசிகுமார் உள்ளிட்ட 4 பேர் டிரான்ஸ்ஃபார்மருக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர். அதே மருத்துவனையில் மற்றொரு பகுதியில் ஜெனரேட்டரை மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், காலை 11 மணிக்கு திறந்து வைத்தார். அமைச்சர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் மின் சப்ளை வழங்கப்பட்டது. இதனால், டிரான்ஸ்ஃபார்மரில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தவர்கள் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில், சேட்டு சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். சசிக்குமார் ஆபத்தான நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்லித்தான் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக, விசாரணையில் தெரிய வந்தது. அதனால், இலவசமாக சிகிச்சையளிக்கும்படி தெரிவிக்கப்பட்டது. மருந்து மாத்திரைகளுக்கு மட்டும் பணம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை சசிக்குமார் இறந்தார். சிகிச்சை அளித்ததற்கு பணம் செலுத்தி விட்டு, பிணத்தை எடுத்துச் செல்லும்படி மருத்துவனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சசிகுமாரின் உறவினர்கள், வெங்கட்டாபுரம் பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார் தலைமையில் அலமேலு மங்காபுரத்தில் நேற்று மாலை சாலை மறியல் செய்தனர். இறந்த சசிகுமார் குடும்பத்தினருக்கு அமைச்சர் விஜய் உரிய நஷ்டஈடு தர வேண்டும், மருத்துவனை செலவை அமைச்சரே ஏற்க வேண்டும். பேச்சு வார்த்தை நடத்த கலெக்டர் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஏ.டி.எஸ்.பி., பட்டாபி தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. சாலை மறியலால் சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிரடிப்படையினர் சாலை மறயில் செய்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், வேலூர் ஆர்.டி.ஓ., ஜெயஸ்ரீ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நஷ்டஈடு தருவதாக கூறப்பட்டது. சாலை மறியலால் இரவு 9 மணி வரை போக்குவரத்து பாதித்தது.

