/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலூர் திருவள்ளுவர் பல்கலையில் விடைத்தாள் மாயம்?
/
வேலூர் திருவள்ளுவர் பல்கலையில் விடைத்தாள் மாயம்?
ADDED : ஜூலை 24, 2011 12:52 AM
வேலூர்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், அரியர்ஸ் தேர்வு எழுதிய, 26 மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் அருகே சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள திருவள்ளுவர் கலைக் கல்லூரியில், பயோ கெமிஸ்ட்ரி பாடத்தில் ஃபைனல் இயரில் அரியர்ஸ் வைத்த, 26 மாணவர்களுக்கு, 9 பேப்பர் தேர்வு வைத்து, அதற்கான விடைத்தாள் ஒரு கவரில் போட்டு, திருத்துவதற்காக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு, 5 நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விடைத்தாளர்கள் வந்து சேர்ந்ததா என, சம்மந்தப்பட்ட திருவள்ளுவர் கலைக்கல்லூரி நிர்வாகம் சார்பில், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறையிடம் தொடர்பு கொண்டு நேற்று(23ம் தேதி) கேட்டபோது, வந்து சேரவில்லை என்ற பதில் கிடைத்துள்ளது. ஆனால், 26 மாணவர்களின் விடைத்தாள்கள் அடங்கிய கவர், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களால் பெறப்பட்டு, அதற்கான பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலையில், காணாமல் போனதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று இரவு 9.30 மணிக்கு, காட்பாடி போலீஸில் புகார் செய்தனர்.
பயோ கெமிஸ்ட்ரி தேர்வு முடிவுகள், வரும் 25ம் தேதி வெளிவரும் நிலையில், விடைத்தாள்கள் காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு, வேலூர் மாவட்டம், ஆற்காடு மகா லட்சுமி மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதிய, 226 மாணவியரின் விடைத்தாள்கள் காணாமல் போனது குறித்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.பிறகு, வேறு வழியின்றி, மறு தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இதுபோல விடைத்தாளர்கள் காணாமல் போவது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.