காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
ADDED : அக் 02, 2025 04:42 PM

சென்னை: சென்னையில் இன்று (அக்., 02) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் மாலையில் அதே அளவு விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 30) ஆபரண தங்கம், கிராம், 10,860 ரூபாய்க்கும், சவரன், 86,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 161 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 01) காலை தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் அதிகரித்து , 10,890 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 87,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் அதிகரித்து, 10,950 ரூபாய்க்கும், சவரனுக்கு, 480 உயர்ந்து, 87,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.கடந்த இரண்டு நாட்களாக ஒரே நாளில் இரண்டு முறை உயர்வை கண்டது.
இந்த சூழலில் இன்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.10,880க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று மாலை ஒரு பவுன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.560 உயர்ந்து ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.10,950க்கு விற்பனை ஆகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவது நகை வாங்க விரும்பும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.