/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 28, 2025 05:24 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக 2024ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த விருது விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்தோருக்கு, அதாவது தனி நபர்கள், அமைப்புகள் என மூவருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் பண முடிப்புகளாக வழங்கப்படும்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல், காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை ஆகியவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது.
விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். விண்ணப்பிக்க ஏப்., 15ம் தேதி கடைசி நாள். தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.