/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலை அறிவியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் தொடக்கம்
/
கலை அறிவியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் தொடக்கம்
ADDED : மே 28, 2024 05:44 AM
சீட் வாங்கி தருவதாக ஏமாற்றும் புரோக்கர்களிடம் 'உஷார்'
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளைவிட கடந்த சில ஆண்டுகளாக கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பி.இ., படிப்பை காட்டிலும், தற்போது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., மாணவர் சேர்க்கையில் தான் மிகுந்த போட்டி நிலவி வருகிறது.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானவுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, சுமார் 1 லட்சம் சேர்க்கை இடங்களுக்கு, இருமடங்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது, மாணவர்கள் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங் இந்த வாரம் தொடங்குகிறது. விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1,500 சேர்க்கை இடங்கள் வரை உள்ளன. இதற்காக இரு மடங்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில் அரசு விதிகள் படி கலந்தாய்வு நடத்தி சேர்க்கை இடம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வரும் 29ம் தேதி விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் உள்ள 850 இடங்களுக்கு, ஏராளமான மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அந்த கல்லூரியிலும் 29ம் தேதி முதல் கட்ட சிறப்பு பிரிவு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் இந்த அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தும், பெரும்பாலானவர்களுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து, பிறகு தனியார் கல்லூரிகளை நாடுகின்றனர்.
இந்த போட்டியினையறிந்த கட்சி பிரமுகர்கள், கல்லூரி சார்ந்த பிரமுகர்கள் என சிலர், ஏழை மாணவர்களிடம் சீட் வாங்கி தருவதாக கூறி, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பணம் வசூலித்து ஏமாற்றி வருகின்றனர். இதில், ஒரு சிலர் எப்படியாவது ரெகமெண்டேஷன் செய்து சீட் வாங்கிக்கொடுத்து விடுகின்றனர்.
ஆனால், சிலர் புரோக்கர்கள் போல் செயல்பட்டு, பெற்றோர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுகின்றனர். தொடக்க நிலை கவுன்சிலிங்கின் போது சீட் கிடைக்காத மாணவர்களை அறிந்து கொள்ளும் இந்த நபர்கள், அவர்களிடம் சீட் வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றி விடுகின்றனர்.
சிலர், அமைச்சர், எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர், சேர்மேன் என முக்கிய நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு, கல்லூரி முதல்வர் மற்றும் சேர்க்கை குழுவினரை தொந்தரவு செய்து, குறிப்பிட்ட சீட்டை இலவசமாக வாங்கிவிடுவதும், அதனை பணம் வாங்கிக்கொண்டு சேர்த்தும் விடுகின்றனர். இதனால் அதிக மதிப்பெண் எடுத்த பல மாணவர்களும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் புலம்பி வருகின்றனர்.முறைகேடுகளை தடுக்க, கட் ஆப் மதிப்பெண்கள், சேர்க்கை நிலவரங்களை வெளிப்படையாக வெளியிட்டு, தகுதியான மாணவர்களுக்கு, உரிய வாய்ப்பளிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.