/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் ரூ.1.40 கோடியில் டபுள் பாக்ஸ் கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
/
திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் ரூ.1.40 கோடியில் டபுள் பாக்ஸ் கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் ரூ.1.40 கோடியில் டபுள் பாக்ஸ் கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் ரூ.1.40 கோடியில் டபுள் பாக்ஸ் கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மே 13, 2024 04:44 AM

திண்டிவனம்: திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், மழை நீர் தடையில்லாமல் வெளியேற அமைக்கப்படும் 'டபுள் பாக்ஸ் கல்வெர்ட்' அமைக்கும் பணியை விரைந்து முடிக்க, நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் பகுதியில் கனமழை பெய்யும் போது, திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள காந்தி நகர், வகாப் நகர் பகுதியில் மழைநீர் வீடுகளில் சூழ்வது தொடர்கதையாக இருந்து வந்தது.
காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அனைத்தும் காந்தி நகர் வழியாக கரைபுரண்டு வருவதால், அங்குள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுவது வாடிக்கையாக உள்ளது.
மேலும், மழைநீர் வெளியேற காந்தி நகர், வகாப் நகரில் வாய்க்கால் குறுகியதாக இருப்பதுடன், மரக்காணம் சாலையில் செல்லும் பிரதான வெள்ளவாரி வாய்க்காலில் நீரை உள்வாங்கி வெளியேற்றும் வகையில் போதுமான அகலம் இல்லாமல் துார்ந்தும் கிடந்தது. இதனால், மழை காலங்களில் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துவிடும்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காந்தி நகர், வகாப் நகரிலிருந்து மழை நீர் மற்றும் வெள்ள நீர், திண்டிவனம் மெயின் ரோட்டில் வெள்ளவாரி வாய்க்காலை கடந்து செல்லும் வகையில், நகாய் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
அதன்படி, திண்டிவனம் சாலையில் உள்ள வகாப் நகர் எதிரில் (டி.கே.பி., பெட்ரோல் பங்க் எதிரில்) உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 'டபுள் பாக்ஸ் கல்வெர்ட்' அமைப்பதற்காக, 1 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கல்வெர்ட் மூலம், மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் போது, வகாப் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் அனைத்தும் கல்வெர்ட் வழியாக, தடையில்லாமல் வெள்ளவாரி வாய்க்கால் வழியாக வௌியேறி கடலுக்கு சென்றுவிடும்.
இதற்கான பணி கடந்த பிப்ரவரி மாதம் நகாய் சார்பில் துவங்கியது. அதற்காக, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் (பெட்ரோல் பங்க் எதிரில்), கல்வெர்ட் அமைக்கும் பணிக்காக, அந்த பகுதியில் சாலை அடைக்கப்பட்டது.
கல்வெர்ட் நடைபெறும் இடத்தில் உள்ள புதுச்சேரி - திண்டிவனம் சாலையை இரண்டு பாகமாக பிரித்து வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தி, வாகனங்கள் செல்கின்றன.
இந்த குறுகலான வழியில், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களும், புதுச்சேரியிலிருந்து திண்டிவனத்திற்கு வரும் வாகனங்களும் செல்கின்றன.
இதேபோல் புதுச்சேரி யிலிருந்து சென்னை செல்லும் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும், கல்வெர்ட் பணி நடைபெறும் இடம் வழியாக வந்து, ஜெயபுரம் ரவுண்டானவில் யூ டர்ன் போட்டு, சென்னை சாலையை பிடிக்கிறது.
கல்வெர்ட் பணி நடைபெறும் இடத்தில் உள்ள சாலையில் அனைத்து வாகனங்களும் கடப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
தற்போது, ஒரு பக்கத்தில் மட்டும் (திண்டிவனம் - புதுச்சேரி சாலை) கல்வெர்ட் பணிகள் முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மறுபுறம் (புதுச்சேரி - திண்டிவனம் சாலை) கல்வெர்ட் பணி துவங்க உள்ளது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் பணிகள் முடிவடையாமல் இழுபறி நிலை நீடிப்பதால், வாகன ஓட்டிகள் தினமும் பாதிக்கப்பட்டு, அவதியடைகின்றனர்.
இதுபற்றி நகாய் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. தற்போது டபுள் பாக்ஸ் கல்வெர்ட் பணியில், ஒரு பக்கம் முடிந்துள்ளது.
சாலையின் மறுபுற கல்வெர்ட் பணி விரைவில் துவங்க உள்ளது. பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முடிந்துவிடும்' என்றனர்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்பை கருத்தில் கொண்டு, டபுஸ் பாக்ஸ் கல்வெர்ட் அமைக்கும் பணியை குறித்த காலக் கெடுக்குள் முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.