/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய பஸ் நிலையத்திற்கு எந்த பெயரை வைப்பது; திண்டிவனத்தில் துவங்கியது சர்ச்சை
/
புதிய பஸ் நிலையத்திற்கு எந்த பெயரை வைப்பது; திண்டிவனத்தில் துவங்கியது சர்ச்சை
புதிய பஸ் நிலையத்திற்கு எந்த பெயரை வைப்பது; திண்டிவனத்தில் துவங்கியது சர்ச்சை
புதிய பஸ் நிலையத்திற்கு எந்த பெயரை வைப்பது; திண்டிவனத்தில் துவங்கியது சர்ச்சை
ADDED : செப் 10, 2024 12:32 AM
திண்டிவனத்தில் குறுகிய இடத்தில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் பஸ் நிலையம், மற்றொன்று தொலைதுாரம் செல்லும் பஸ்கள் வந்து செல்லும் இடமான, திண்டிவனம் மேம்பாலத்திற்கு கீழ் செயல்பட்டு வரும் பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் உள்ளன.
திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் நிரந்தர பஸ் நிலையம் கட்டுவதற்காக கடந்த 2010ம் ஆண்டில் சென்னை சாலையில் 6 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
தற்போது, இந்த பஸ் நிலையத்திற்கு யார் பெயரை வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று 10ம் தேதி காலை நடைபெற உள்ள நகர மன்ற கூட்டத்தில் பஸ் நிலையத்திற்கு யார் பெயர் வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட உள்ளது.
புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன பஸ் நிலையத்திற்கு தி.மு.க., கவுன்சிலர் சின்னசாமி சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்க வேண்டும் என்று தனியாக கடிதம் கொடுத்ததின் பேரில், மன்றத்தில் தீர்மானமாக இடம் பெற்றுள்ளது.
இதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட அனைத்து ரெட்டி நலச் சங்கத்தினர், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் நேருவை சந்தித்து, திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் பெயரை வைக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.
இது தொடர்பான தீர்மானம் நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதத்தின் படி கவுன்சிலர்களின் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பெயரை வைக்க வேண்டும் என, நகர மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்க உள்ளனர்.
இதனால் புதிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி, அண்ணாதுரை, ஓ.பி.ஆர்., ஆகிய மூன்று பெயர்களில் யார் பெயரை வைப்பது என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.