/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செம்மண் குவாரி வழக்கு மேலும் 2 சாட்சிகள் 'பல்டி'
/
செம்மண் குவாரி வழக்கு மேலும் 2 சாட்சிகள் 'பல்டி'
ADDED : மார் 05, 2024 04:37 AM
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் 2 அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் பரபரப்பு நிலவியது.
கடந்த 2006-2011ம் ஆண்டு நடந்த தி.மு.க., ஆட்சியின்போது, விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் விதிகளை மீறி மண் எடுத்ததால் ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் மொத்தம் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் வரை சாட்சியம் அளித்த 14 பேரில், 11 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு 15வது சாட்சியான அரியலுார் திருக்கை வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், 16வது சாட்சியான மரகதபுரம் வி.ஏ.ஓ., புஷ்பராஜன் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
அப்போது, இருவரும், செம்மண் குவாரி புகார் தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது. அப்போதைய உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும், தங்களுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை எனக் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணை நாளை (இன்று 5ம் தேதி) நடைபெறும் என உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் தொடர்ந்து 'பல்டி' அடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

