/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை
/
அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை
அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை
அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை
ADDED : அக் 14, 2024 09:47 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தேவையான அளவு உரங்கள் கையிருப்பு உள்ளது. மகசூல் அதிகரிக்க டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக, விலை குறைந்த எளிதில் கிடைக்கும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த வேளாண் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சீனுவாசன் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில், தற்போது தேவையான உரங்கள் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக யூரியா 7,198 டன், டி.ஏ.பி. 2,467 டன், பொட்டாஷ் 1,407 டன், காம்ப்ளக்ஸ் 6,542 டன், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 1,455 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் விலை உயர்வாக உள்ள டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக, விலை குறைவான சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினைப் பயன்படுத்தலாம். சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்து மற்றும் சல்பர், கால்ஷியம் போன்ற நுண்ணுாட்ட உரங்கள் சிறிதளவு உள்ளன.
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு எளிதில் கிடைக்கிறது. சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தின் மூலம், பயிர்களுக்கு கால்சியம் மற்றும் சல்பர் சத்து கூடுதலாக கிடைக்கிறது.
மேலும், நீரில் கரையும் மணிச்சத்து கிடைப்பதால், பயிரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. நிலக்கடலை மற்றும் எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு, சல்பர் அதிகம் தேவைப்படுவதால், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம், அதிக எண்ணெய் சத்துடன், எண்ணெய் வித்து பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.
எனவே, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பு, எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள் மற்றும் தென்னை, தோட்டக்கலைப் பயிர்களுக்கு தேவைப்படும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை வாங்கி பயன்பெறலாம்.
விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு முன்னதாக, ஒரு ஏக்கருக்கு 300 கிலோ கிராம் மட்கிய தொழு உரத்துடன், பரிந்துரைக்கப்பட்ட சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினைக் கலந்து, 30 நாட்கள் வைத்திருக்க வேண்டும்.
பின், அதனை அடியுரமாக பயிர் சாகுபடிக்கு முன் இடுவதனால், மணிச்சத்தின் பயன்பாடும் அதிகரிக்கிறது.
மேலும், பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மையை பெறுகிறது. விவசாயிகள், பாஸ்போ பாக்டீரியா என்னும் உயிர் உரத்தை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தினை கரைத்து, பயிர்களுக்கு வழங்கிடலாம்.
இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சீனுவாசன் கூறினார்.