ADDED : பிப் 03, 2024 12:24 AM
திருக்கனுார், -புதுமணப் பெண் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் நல்லாப்பாளையத்தை சேர்ந்தவர் வல்லரசு, 24; செங்கல் சூளை தொழிலாளி. இவர் தனது உறவினரான கார்த்திகேயன் மகள் கோபிகா, 20: என்பவரை காதலித்து 2 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதனால், கோபிகாவுடன் அவரது குடும்பத்தினர் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர்.
வல்லரசு செங்கல் சூளை வேலைக்காக ஒரு வாரத்திற்கு முன் குடும்பத்துடன் புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் அடுத்த வம்புபட்டு கிராமத்திற்கு வந்து தங்கினார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி மதியம் வல்லரசு, கோபிகா வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்தை குடித்துவிட்டு, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அவரது தாய் அரும்பவிற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அரும்பு, ஜிப்மரில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டிருந்த கோபிகாவுடன் இருந்து கவனித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபிகா இறந்தார்.
இது குறித்து அவரது உறவினர் கோவிந்தராஜ், கோபிகா இறப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், கோபிகாவிற்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால், தாசில்தார் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

