
லாரி மோதி வாலிபர் பலி
பண்ருட்டியைச் சேர்ந்தவர் தணிகாசலம், 40; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 6:40 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பைத்தாம்பாடி கூட்டு சாலையை பைக்கில் கடக்க முயன்றார். அப்போது சென்னை - திருச்சி நோக்கி சென்ற டேங்கர் லாரி இவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெஞ்சு வலி: வாலிபர் பலி
கிளியனுார் அடுத்த தேற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன், 30; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்றவர் அங்கு மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இளவரசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மின்னல் தாக்கி பசு மாடு பலி
செஞ்சி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். விவசாயி. இவரது பசுமாடு நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ந்தது. அப்போது பெய்த மழையின் போது மின்னல் தாக்கி இறந்தது. செஞ்சி வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனை: 28 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சங்கராபுரம் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, ெஹல்மெட் அணியாமல் ஓட்டியது, வேகமாக வாகனம் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, வாகனத்தில் 3 பேர் அமர்ந்து சென்றது என 28 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
மனைவி மாயம்: கணவர் புகார்
வரஞ்சரம் அடுத்த முடியனுாரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி செல்வி, 38; திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். செல்வி கடந்த மாதம் 31ம் தேதி திருச்செந்துார் முருகன் கோவிலுக்குச் சென்று வருவதாக, கணவரிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சூதாடிய 6 பேர் கைது
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மண்மலை கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தைச் சேர்ந்த சேட்டு, 36; பிரகாஷ்ராஜ், 27; முருகன், 37; வடக்கனந்தல் தண்டபாணி, 48; கரடிசித்துார் பாக்கியராஜ், 42; கோவிந்தசாமி, 40; ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மது பாட்டில் விற்றவர் கைது
கச்சிராயபாளையம் போலீசார் நேற்று கரடிசித்துார் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, 40; என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மகள் மாயம்: தாய் புகார்
கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார் மகள் விஜயலட்சுமி, 19; அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த 10ம் தேதி கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் ராசாத்தி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை கலைவாணர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், காரில் வந்த திருவள்ளூர் மாவட்டம் பாண்டுரங்கபுரத்தைச் சேர்ந்த விஜய், 27; என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று, பைக்கில், புதுச்சேரியில் இருந்து மொரட்டாண்டியில் உள்ள கெஸ்ட் அவுசிற்கு மதுபாட்டில்கள் எடுத்து சென்ற சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த சஞ்சய் சாய்குமார், 22; என்பவரையும் கைது செய்தனர்.
கார் மோதி வாலிபர் பலி
சின்னசேலம் அடுத்த கீழ்க்குப்பம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் மதன்குமார், 24; இவர் நேற்று காலை 8:00 மணியளவில் நைனார்பாளையம் சாலையில் பைக்கில் சென்றார். பேரிக்காடு அருகே சென்ற போது அம்சாகுளம் பகுதியை சேர்ந்த கந்தன் மகன் நவீன்பிரபு என்பவர் ஓட்டி வந்த கார் மதன்குமார் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மதன் குமார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.