ADDED : மார் 28, 2025 05:20 AM
மனைவி மாயம்: கணவர் புகார்
மயிலம் அடுத்த கொடிமா கிராமத்தைச் சார்ந்தவர் சக்திவேல், 31; இவரது மனைவி லாவண்யா, 23; இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசிக்கின்றனர். கடந்த 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சக்திகேவல் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண்ணைத் தாக்கியவர் கைது
விழுப்புரம் வி.மருதுாரைச் சேர்ந்த 21 வயதுடைய திருமணமான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த திருஞானம் மகன் கணபதி, 21; கடந்த 4 மாதங்களாக பேசி பழகியுள்ளார். அந்த பெண் பேசுவதை தவிர்த்த நிலையில், நேற்று முன்தினம் கணபதி, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கற்களை வீசி தகராறு செய்து, திட்டி, கத்தியால் குத்த முயன்றார். விழுப்புரம் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனர்.
மின்ஒயர் திருட்டு: 2 பேர் கைது
வானூர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், காட்ரம்பாக்கம் செல்லக்குட்டி (எ) வாஞ்சிநாதன், 23; என்பதும், விவசாய நிலங்களில் மின் மோட்டார் ஒயர்களை புதுச்சேரி, கரசூர் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு கடை உரிமையாளரான ஜெயின் பாட்ஷா (எ) அசேன் பாட்ஷா, 55; என்பவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்து, 30 கிலோ காப்பர் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.
தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
விழுப்புரம் தக்கா தெருவைச் சேர்ந்தவர் சேவியர் மகன் ஆனந்த் சவுரி, 33; அதே பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் பால், 52; உறவினர்கள். இவர்களுக்கான பூர்வீக வீடு, 2 சென்ட் நிலத்தை எட்வின் பால் அனுபவித்து வருகிறார். இதில், கடந்த 24ம் தேதி பங்கு கேட்ட ஆனந்த் சவுரியை, எட்வின்பால், அவரது தம்பி மிக்சேல், மிக்சேல் மனைவி அனுஷியா, உறவினர் அலமேலு ஆகியோர் திட்டி தாக்கினர். புகாரின் பேரில், எட்வின்பால் உட்பட 4 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி அடுத்த மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மொபைல் போனில் இருந்து வேறு நபர் பெண்ணிடம் பேசியுள்ளார். இது தொடர்பாக கடந்த 8ம் தேதி பெண்ணின் குடும்பத்தினர் முத்துக்குமாரினிடம் மொபைல் போனில் பேசியது யார் என்பது குறித்து கேட்டனர். அப்போது, அங்கு வந்த ஸ்ரீதர், அவரது தந்தை கணேசன், தாய் சிந்தாமணி ஆகியோர் பெண்ணின் தந்தையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் ஸ்ரீதர், கணேசன், சிந்தாமணி ஆகியோர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வரதட்சணை: கணவர் மீது மனைவி புகார்
மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சதீஷ், 35; எம்.பி.பி.எஸ்., டாக்டர். இவரது மனைவி தனுஷ்யா, 29; பட்டதாரி. இருவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. ஒரு மாதத்தில் இருந்தே சதீஷ், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இதற்கு உடந்தையாக மாமியார் விமலா, 52; மாமனார் ஏழுமலை, 55; உட்பட 6 பேர் செயல்பட்டதாக தனுஷ்யா கொடுத்த புகாரின்பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விதிமீறிய 22 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் கடைவீதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, குடிபோதையில் ஓட்டியது, 3 பேர் அமரந்து சென்றது, ெஹல்மெட் அணியாமல் ஓட்டியது 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சாட்சியை மிரட்டிய 2 பேர் கைது
விழுப்புரம் கே.கே., ரோட்டைச் சேர்ந்தவர் ராஜசேகர், 50; இவர், எம்.ஜி., ரோட்டில் மளிகை கடையில் பணிபுரிகிறார். இவர், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி இதே கடையில் பணிபுரிந்த முகமது இப்ராகீம், 45; என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியாக உள்ளார். வழக்கு விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் குற்றவாளிகளாக உள்ள விழுப்புரம் கே.கே., ரோட்டை சேர்ந்த ஞானசேகர் மகன்கள் ராஜசேகர், 33; வல்லரசு, 28; ஆகியோர் நேற்று முன்தினம் கடையில் இருந்த ராஜசேகரை சாட்சி சொல்ல கூடாது என கொலை மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
2 வீடுகளில் திருட்டு: போலீஸ் விசாரணை
விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் நடராஜன், 70; ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவர் 2 நாட்களுக்க முன் குடும்பத்துடன் திருத்துறைபூண்டிக்கு சென்றார். நேற்று மாலை 3:00 மணிக்கு இவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து, விழுப்புரம் வந்துபார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 கிராம் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.
இதேபோன்று, அதே பகுதியில்பார்த்தசாரதி நகரைச் சேர்ந்தவர் திருமலை, 63; இவர், கடந்த 23ம் தேதி குடும்பத்துடன் குரோம்பேட்டையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 கிராம் நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பா.ஜ., நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு
காணை அடுத்த ஆயந்துார் டாஸ்மாக் கடை முன்,, பா.ஜ.க., தெற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட 9 பேர் பெயரில், 'உனக்கு குடி, எனக்கு கோடி' பெயரில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். டாஸ்மாக் கடை விற்பனையாளர் அர்ஜூனன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார், தெற்கு தலைவர் தர்மராஜ் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.