சீமை கருவேல மரங்களின் வளர்ச்சியால் ஏரிகள் வறட்சி! நிலத்தடி நீர்மட்டம் குறையும் என விவசாயிகள் அச்சம்
சீமை கருவேல மரங்களின் வளர்ச்சியால் ஏரிகள் வறட்சி! நிலத்தடி நீர்மட்டம் குறையும் என விவசாயிகள் அச்சம்
UPDATED : ஜூலை 15, 2026 08:53 PM
ADDED : ஜூலை 15, 2026 08:52 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றாததால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். நிலத்தடி நீர் மற்றும் ஆற்று பாசனத்தை நம்பி நெற்பயிர், மக்காசோளம், கரும்பு உட்பட பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கட்டுப்பாட்டில் 624 ஏரிகள் உள்ளது. இதில், விழுப்புரத்தில் 506 ஏரிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 118 ஏரிகளும் உள்ளது. இரு மாவட்ட ஏரிகளிலும் தற்போது அளவுக்கு அதிகமாக சீமை கருவேல மரங்கள் பல ஏக்கர் பரப்பளவில் பரவி வளர்ந்துள்ளது.
இந்த சீமை கருவேல மரங்கள் 12 மீட்டர் உயரம், நிலத்திற்கு அடியில் கருவேல மரத்தின் வேர் பல மீட்டர் துாரத்திற்கு செல்லக்கூடியது. இதனால் மற்ற மரங்களை விட, சீமை கருவேல மரத்தின் வேர் அதிக ஆழம் சென்று அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இவை ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மரங்கள், தாவரங்களின் வளர்ச்சியை தடுக்க கூடியது.
சீமை கருவேல மரங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் செழிப்பாக வளர்ந்துள்ளது. இதனால், ஏரிகள் தண்ணீர் இன்றி வரண்டு கிடக்கிறது. ஏரி தண்ணீரை நம்பி வரும் கால்நடைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன. மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கடந்த காலங்களில் ஏரிகளின் சீரமைப்பு பணிகளை பெண்கள் செய்தனர். தற்போது ஏரி மராமத்து பணிகளும் நடைபெறவில்லை.
ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த கோரி, விவசாயிகள் பல முறை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. வழக்கம்போல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இது சம்பந்தமாக பொதுப்பணி துறை (நீர்வளம்) அதிகாரிகளிடம் கேட்டபோது, விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டின் கீழுள்ள ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை விரைவாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தற்போது கோடை வெயில் நிலவி வருகிறது. ஒரிரு மாதத்தில் மழை காலம் துவங்கி விடும். அதற்கு முன்னதாக ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
