/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீயணைப்பு வீரர்களுக்கு தேனீக்களை அகற்ற பயிற்சி
/
தீயணைப்பு வீரர்களுக்கு தேனீக்களை அகற்ற பயிற்சி
ADDED : மார் 12, 2026 03:37 AM

விழுப்புரம்: விழுப்புரம் மண்டல தீயணைப்புத்துறை சார்பில், 5 மாவட்ட தீயணைப்பு பணியாளர்களுக்கு, தேனீக்களை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமை, தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் தென்னரசு துவக்கி வைத்தார். மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி அலுவலர்கள் செந்தில்குமரன், ஜெயசங்கர், விழுப்புரம் நிலைய அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு பயிற்றுனர் சுதந்திரசெல்வன் பங்கேற்று, தேனீக்களை பத்திரமாக அகற்றுவது குறித்து செயல் விளக்கங்களுடன் பயிற்சியளித்தார்.
விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, நாகைபட்டினம், மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேனீக்கள் விவசாயத்திற்கு பெறும் உதவிபுரியும் உயிரினமாகும். பூக்களை காயாக மாற்றும் மகரந்த சேர்க்கைக்கு இயற்கை வழி உதவும் தேனீக்களை நாம் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். தீயணைப்பு வீரர்கள், இனி தேன் கூடுகளை அகற்றச்செல்லும்போது, பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
பாதுகாப்பான ஆடை அணிந்து, ஒரு சாக்கு பை போன்றவற்றை தேன் கூடு மீது போட்டு மூடி, தேனீக்கள் இறக்காத வகையில் அகற்ற வேண்டும். பாதிப்பில்லாத புகை அடித்தும் அகற்றலாம். தேன் கூடு உள்ள மரக்கிளையை ஒடித்து எடுத்துச்சென்று அகற்றலாம். ஒருபோதும் தீ வைத்து தேனீக்களை கொல்லக்கூடாது என விளக்கி பயிற்சியளித்தனர்.

