/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க... வலியுறுத்தல்!மாவட்ட விவசாயிகள் போராட்டம்
/
கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க... வலியுறுத்தல்!மாவட்ட விவசாயிகள் போராட்டம்
கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க... வலியுறுத்தல்!மாவட்ட விவசாயிகள் போராட்டம்
கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க... வலியுறுத்தல்!மாவட்ட விவசாயிகள் போராட்டம்
ADDED : மார் 12, 2026 03:38 AM

விழுப்புரம்: கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தியும், மாவட்ட கரும்பு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில், கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. கரும்பு விவசாயத்தில் 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 50 ஆயிரம் ஏக்கர் அளவில் கரும்பு பயிரிடுகின்றனர். ஆனால், கரும்பு விவசாயிகளுக்கான பிரச்னைகள் தீர்க்கப்படாமல் ஆண்டு தோறும் தொடர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் முண்டியம்பாக்கம், பெரியசெவலை, செஞ்சி பகுதிகளில் சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் பதிவு செய்து, விவசாயிகள் கரும்பு அனுப்புகின்றனர். கரும்பு நிலுவை தொகை, மூடப்பட்ட ஆலை பகுதி விவசாயிகள் அவதிப்படுவது, கரும்புக்கான விலை யின்றி தவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கூறியதாவது: கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்டுகின்றனர். கரும்பு டன்னுக்கு ரூ.3,250 வழங்கப்படுகிறது. நீண்டகாலமாக விலை உயர்த்தப்படாமல் உள்ளதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையின்போது, கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், 4 ஆண்டுகளாகியும் கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய வேளாண் அமைச்சரும், கரும்புக்கு உரிய விலை வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், உயர்த்தி அறிவிக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களுக்கு வட்டி கட்டாமல் பாதித்து வருகின்றனர். கடந்தாண்டு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும், சிறப்பு ஊக்கத் தொகையும் டன் ஒன்றுக்கு ரூ.350 வழங்காமல் உள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாமல் உள்ளது.
புதுச்சேரி எல்.ஆர்.பாளையம் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், அதனை நம்பியிருந்த விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பாதித்துள்ளனர். அந்த ஆலை யின் கரும்புகள், செங்கல்பட்டு படாளம் ஆலைக்கு அனுப்ப பரிந்துரைத்துள்ளதால், நீண்ட தொலைவுக்கு கரும்பினை அனுப்புகின்றனர். வழியில் விபத்து, கரும்பு காய்ந்து பாதிப்பது போன்ற இழப்புகள் ஏற்படுகிறது. இதனால், அந்த ஆலை கரும்பு பதிவு பகுதியை, பொது பகுதியாக நிர்வாகம் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் விரும்பியபடி அருகே உள்ள ஆலைகளுக்கு கரும்பை அனுப்ப முடியும் என்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று பகல் 11:15 மணிக்கு திரண்ட கரும்பு விவசாயிகள் 50 பேர், கையில் கரும்புகளுடன் திரண்டு திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க., அரசு வாக்குறுதியளித்தபடி டன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும், ஊக்கத் தொகையை அறிவிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து, அவர்களை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்தனர்.

