/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீடு வழக்கில் வரும் 3ம் தேதி தீர்ப்பு
/
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீடு வழக்கில் வரும் 3ம் தேதி தீர்ப்பு
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீடு வழக்கில் வரும் 3ம் தேதி தீர்ப்பு
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீடு வழக்கில் வரும் 3ம் தேதி தீர்ப்பு
ADDED : ஜன 30, 2024 06:33 AM

விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், வரும் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என விழுப்புரம் கோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, கடந்த 2021ம் ஆண்டு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
அதில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறையும், புகார் அளிக்கச் சென்ற அந்த பெண் அதிகாரியின் காரை மறித்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ்தாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், ராஜேஷ்தாஸ் மீதான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜரானார்.
அவரது வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, 'இவ்வழக்கின் சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்டதாக இருப்பதால், கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு வழக்கை மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளோம். அது விசாரணையில் உள்ளதால், அதுவரை எங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க கால அவகாசம் வழங்க வேண்டும்' என கோரினார்.அதற்கு அரசு வழக்கறிஞர் கலா குறுக்கிட்டு, 'ஏற்கனவே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிப்ரவரி 23ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளதால், மேலும் அவகாசம் அளிக்க கூடாது' என்றார்.
இரு தரப்பையும் விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞரிடம், 'ஏற்கனவே ஐகோர்ட்டில் மனு விசாரணையில் இருப்பதாக கூறி காலஅவகாசம் கேட்டீர்கள், தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மனு இருப்பதாக அவகாசம் கேட்கிறீர்கள், ஒவ்வொரு விசாரணையின் போதும் வாதிடாமல், தொடர்ந்து அவகாசம் கேட்பது சரியல்ல. இனி அவகாசம் தர முடியாது.
வரும் 31ம் தேதிக்குள், உங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தால் அதனை குறிப்பிடலாம், இல்லையெனில் கடைசி வாய்ப்பாக நாளை 31ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகி தங்கள் வாதங்களை வைக்க வேண்டும்.
பிப்ரவரி 3ம் தேதி, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்' என உத்தரவிட்டார்.