ADDED : பிப் 04, 2024 03:58 AM

வானுார் : திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, கல்வி நிறுவன வாகனங்களின் டிரைவர்களுக்கான இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.
மொரட்டாண்டி டோல்கேட் அருகே நடந்த முகாமிற்கு, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், முருகவேல் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கிளியனுார் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமையில் டாக்டர்கள் வைதேகி, கார்த்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் 200க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
முகாமில், கண் பரிசோதனை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பல் சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், கண் மருத்துவ உதவியாளர் குகன், சுகாதார ஆய்வாளர்கள் ரவி, சக்திவேல் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.