ADDED : செப் 08, 2025 02:51 AM
திண்டிவனம்: மாந்தோப்பில் பாட்டியுடன் துாங்கிய, 5 வயது சிறுமி பாம்பு கடித்ததில் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராண்டிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்காணம். இவரது தாயார் லட்சுமி, 60; அதே பகுதியில் உள்ள ஸ்ரீதர் என்பவரின் மாந்தோப்பில் காவல் பணி புரிந்து வந்தார்.
நேற்று முன்தினம், இரவு லட் சுமி, துலுக்காணத்தின் மகள் தேவி, 5 ; உடன், மாந்தோப்பில் துாங்கினார். நள்ளிரவில் மூதாட்டி மற்றும் சிறுமியை பாம்பு கடித்துள்ளது.
உடனே இருவரையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி நேற்று மாலை 5:00 மணியளவில் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.
மூதாட்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.