/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
/
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
ADDED : நவ 26, 2025 09:08 AM

செஞ்சி: மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கெங்கமுத்து மகன் மதியழகன், 30; இவருக்கும் ஈச்சர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் பார்வதி, 27; என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக, பார்வதி கணவரிடம் இருந்து பிரிந்து இரண்டு ஆண்டாக தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த மாதம் கணவரின் தந்தை இறந்ததால், பார்வதி தனது கணவர் வீடாகன திருவம்பட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் காலை பார்வதி பள்ளத்தில் விழுந்து இறந்து விட்டதாக மதியழகன், பார்வதியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.திருவம்பட்டு கிராமத்திற்கு வந்த பார்வதியின் குடும்பத்தினர் பார்வதியின் நெற்றியில் காயம் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து பார்வதியின் தாய் ரஞ்சிதம், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக செஞ்சி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, கடந்த 23ம் தேதி இரவு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில், பார்வதியை சுவற்றில் மோதி மதியழகன் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, செஞ்சி போலீசார் நேற்று சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி மதியழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

