/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை
/
மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : டிச 06, 2024 06:29 AM

விழுப்புரம் : காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர், 44; கட்டட தொழிலாளி. இவர், தனக்கு திருமணமானதை மறைத்து, ராஜலட்சுமி, 39; என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டு, விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கிராமத்தில் வசித்து வந்தார்.
சங்கர் தினமும் குடித்துவிட்டு வந்து, ராஜலட்சுமியை தாக்கி கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு நவ., 13ம் தேதி, ராஜலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் ராஜலட்சுமி மீது மண்ணெணணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றார்.
தீக்காயமடைந்த ராஜலட்சுமி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ராஜலட்சுமி அளித்த புகாரில், வளவனுார் போலீசார் சங்கர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்தது.
விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார்.