/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நண்பரை ஏமாற்றி பணத்தை அபகரித்து கொன்றவர் கைது
/
நண்பரை ஏமாற்றி பணத்தை அபகரித்து கொன்றவர் கைது
ADDED : ஜன 02, 2025 12:24 AM

திருவெண்ணெய்நல்லுார்:விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குமரன், 27, விவசாயி. இவர், செப்டம்பர் 19ல் மாயமானார். இவரது தந்தை முருகன் புகாரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் தேடி வந்தனர்.
சந்தேகத்தில், அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரனின் நண்பன் தமிழரசனை பிடித்து விசாரித்தனர். அவர், பணத்துக்கு ஆசைப்பட்டு முத்துக்குமரனை கொன்று, மலட்டாற்றில் புதைத்து விட்டதாகக் கூறினார். தமிழரசனை நேற்று முன்தினம் மலட்டாற்றுக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர். தமிழரசன் காட்டிய இடத்தில், தோண்டிப் பார்த்தபோது உடல் கிடைக்கவில்லை.
ஆத்திரமடைந்த உறவினர்கள், நேற்று முன்தினம் மாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு தமிழரசனை, 27, போலீசார் கைது செய்தனர். போலீசில் தமிழரசன் நேற்று கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
முத்துக்குமரனின் வங்கிக் கணக்கில் இருந்த, 8 லட்சம் ரூபாயை எடுப்பதற்காக என்னை வங்கிக்கு அழைத்து சென்றார். வங்கியில் முத்துக்குமரனிடம் செக்கில் கையெழுத்து பெற்று, வங்கியில் செலுத்துவது போல ஏமாற்றி அழைத்து வந்து விட்டேன்.
பின், அவருக்கு தெரியாமல் இரு தவணைகளாக 8 லட்சம் ரூபாயை என் வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டேன். இதை அறிந்துகொண்ட முத்துக்குமரன், பணத்தை தரும்படி வற்புறுத்தினார். இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் 19ல் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாலை 5:00 மணிக்கு பணம் கொடுப்பதாகக் கூறி முத்துக்குமரனை எங்கள் நிலத்திற்கு அழைத்து வந்தேன். அங்கு முத்துக்குமரனை தாக்கினேன்.
இதில் முத்துகுமரன் இறந்து விட்டார். அவரின் உடலை மலட்டாற்றில் குழி தோண்டி புதைத்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, தமிழரசனை நேற்று இரண்டாவது நாளாக மலட்டாற்றிற்கு, போலீசார் அழைத்துச் சென்று, மாலை 5:30 மணி வரை தேடியும் உடல் கிடைக்கவில்லை. உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என போலீசார் கூறினர்.