/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நிவாரண தொகை வழங்க கணக்கெடுப்பதில் குளறுபடி: பாதித்த பகுதிகள் விடுபட்டதால் தொடரும் மறியல்கள்
/
வெள்ள நிவாரண தொகை வழங்க கணக்கெடுப்பதில் குளறுபடி: பாதித்த பகுதிகள் விடுபட்டதால் தொடரும் மறியல்கள்
வெள்ள நிவாரண தொகை வழங்க கணக்கெடுப்பதில் குளறுபடி: பாதித்த பகுதிகள் விடுபட்டதால் தொடரும் மறியல்கள்
வெள்ள நிவாரண தொகை வழங்க கணக்கெடுப்பதில் குளறுபடி: பாதித்த பகுதிகள் விடுபட்டதால் தொடரும் மறியல்கள்
ADDED : டிச 13, 2024 07:27 AM

செஞ்சி: மாவட்டம் முழுதும் வெள்ள சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தாமல் வெள்ள நிவாரணம் வழங்குவதால் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து மறியல், முற்றுகை போராட்டங்கள் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலின் போது பெய்த கன மழை காரணமாக சாத்தனுார் அணை திறக்கப்பட்டது. இதில், மரக்காணம், செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணைநல்லுார் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டது.
வெள்ள நிவாரணம் வழங்க விழுப்புரம் தாலுகாவில் 97 சதவீதம் ஊராட்சிகளும், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார், மரக்காணம் தாலுகாக்களில் 100 சதவீதமும், வானுார் 16, திண்டிவனம் 7, செஞ்சி 48, மேல்மலையனுார் 0 சதவீதமும் ஒதுக்கி உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலும் கணக்கெடுப்பும் நடத்தவில்லை.
செஞ்சி நகரில் பாதிப்பு இல்லாத பகுதிக்கு நிவாரணம் வழங்கி விட்டு பாதிப்புள்ள பகுதிக்கு வழங்கவில்லை. மேல்மலையனுார் ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தும் ஒரு கிராமம் கூட தேர்வு செய்யப்படவில்லை.
திண்டிவனம் தாலுகாவில் உள்ள மயிலத்தில் உச்சபட்ச மழை பெய்த போதிலும் இந்த ஒன்றியத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை.
இதனால் மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.
கடந்த 5ம் தேதி மேல்மலையனுார் ஒன்றியம், மேலச்சேரியிலும், 9ம் தேதி சொக்கனந்தல், கலத்தம்பட்டு, தென்பாலை, வடபாலை, ஆத்திப்பட்டு கிராம மக்கள் சத்தியமங்கலத்திலும், அதே நாளில் செஞ்சியிலும், நரிக்குறவர்கள் மேல்மலையனுாரிலும் சாலை மறியல் செய்தனர்.
சோமசமுத்திரம் கிராமத்தில் ரேஷன் கடையை பூட்டி மறியல் செய்தனர். 11ம் தேதி செஞ்சி, மேல்ஒலக்கூர், புதுப்பேட்டையிலும் சாலை மறியல் செய்தனர். மேல்மலையனுாரில் அ.தி.மு.க., - பா.ம.க.,வினர் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தில் கிராம மக்கள் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
கணக்கெடுப்பு நடத்தாமல் நிவாரணம் வழங்கியதால் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுதும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறையினரும், போலீசாரும் வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் மறியல், முற்றுகை போராட்டங்களை எதிர் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருவதால் பிற பணிகளும் பாதிக்கப்படுகிறது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் முறையான கணக்கெடுப்பு நடத்தி உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் விடுபடாமல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

