/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மறியல் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என வதந்தி: தொடரும் சாலை மறியலால் வாகன ஓட்டிகள் அவதி
/
மறியல் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என வதந்தி: தொடரும் சாலை மறியலால் வாகன ஓட்டிகள் அவதி
மறியல் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என வதந்தி: தொடரும் சாலை மறியலால் வாகன ஓட்டிகள் அவதி
மறியல் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என வதந்தி: தொடரும் சாலை மறியலால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 17, 2024 05:36 AM
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயலால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர்சூழ்ந்தது. விவசாய நிலங்கள் குடிசை வீடுகள், கால்நடைகள் என பரவலாக பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தது. இதில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய் மற்றும் வீடுகள், பயிர்கள், கால்நடைகள் பாதிப்பு என தனித்தனியாக அரசு அறிவித்தபடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய் பல கிராமங்களில் வழங்கப்படவில்லை.
மாவட்ட நிர்வாகமும், பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும், மற்ற பகுதிகளுக்கு இல்லை என அறிவித்துவிட்டது.
இதனால் நிவாரணம் கிடைக்காத பல கிராம மக்கள் மாவட்டத்தில் தொடர்ந்து குறிப்பாக போக்குவரத்து பிசியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்து, வாகன ஓட்டிகளுக்கும் பஸ் பயணிகளுக்கும் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கனிவாக பேசி, நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறி, மறியலை விலக்கி கொள்ள வைக்கின்றனர்.
இருந்தாலும் சாலை மறியல் குறைந்தது 30 நிமிடத்திற்கு மேல் நடப்பதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கிராம மக்களிடம் சாலை மறியல் செய்தால்தான் அரசு நிவாரணம் கிடைக்கும் என வதந்தி பரவி விட்டதால், மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக திண்டிவனம் - புதுச்சேரி சாலை, திண்டிவனம் - விழுப்புரம் சாலை, திண்டிவனம் - வந்தவாசி சாலை, திண்டிவனம் - திருவண்ணாமலை சாலை என தேசிய நெடுஞ்சாலையை குறி வைத்து சாலை மறியல் செய்கின்றனர்.
ஆரம்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தற்போது தொடரும் சாலை மறியலை முடிவிற்கு கொண்டு வருவதற்கு போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்கின்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சாலை மறியல் செய்தால் அரசு நிவாரணம் கிடைக்கும் என விஷமிகள் கிராம மக்களை திசை திருப்பி சாலை மறியலில் ஈடுபட வைக்கின்றனர். அரசு அறிவித்துள்ள ஆணைப்படி, பாதிக்கப்பட்டபகுதிகளின் சேதாரத்தை கணக்கில் கொண்டு நிவாரணம் வழங்கப்படுகிறது.
இதில் சேதமடைந்த வீடுகள், விவசாய நிலங்கள், கால்நடைகள் இழப்பு ஆகியவற்றிற்கு நிவாரணம் வழங்கும் பணி நடக்கிறது.
மாவட்டம் முழுதும் நிவாரணம் என அரசு அறிவித்தால்தான் விடுபட்ட இடங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது' என்றனர்.