/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் அருங்காட்சியகம்! நீண்டகால கோரிக்கை ஏற்று அமைகிறது
/
விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் அருங்காட்சியகம்! நீண்டகால கோரிக்கை ஏற்று அமைகிறது
விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் அருங்காட்சியகம்! நீண்டகால கோரிக்கை ஏற்று அமைகிறது
விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் அருங்காட்சியகம்! நீண்டகால கோரிக்கை ஏற்று அமைகிறது
ADDED : டிச 28, 2024 05:51 AM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், தொல்லியல் ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையடுத்து, கோலியனூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து வைக்கவும், அதனை காட்சிப்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதனையேற்று, கடந்த 2022ம் ஆண்டு நடந்த தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதனையடுத்து, அதற்கான இடம் தேர்வு பணி நடந்தது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், பொதுப்பணித்துறை சார்பில் அருங்காட்சியகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த இடத்தை பார்வை யிட்ட அருங்காட்சியகங்கள் துறையினர், அது போதுமான இடமில்லை, போக்குவரத்து வசதிகளும் இல்லை என்றும், குறைந்த பட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேவை என்றும் தெரிவித்ததோடு, வேறு இடத்தை வழங்குமாறு கடந்தாண்டு ஜூலை மாதம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்ரோடு பகுதியில், பனங்குப்பம் கிராமத்தில், புதுச்சேரி - கும்பகோணம் நெடுஞ்சாலையொட்டியுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான காலியாக உள்ள 0.52 எக்ேடர் அளவிலான இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்து, கலெக்டர் பழனி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் அரவிந்த், பனங்குப்பத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். பிறகு, இந்த இடத்தை அருங்காட்சியகங்கள் துறைக்கு நிலமாற்றம் செய்யவும், நிலநிர்வாக ஆணையரும் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு முதன்மைச் செயலர் அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில், “விழுப்புரம் கலெக்டர் மற்றும் நில நிர்வாக ஆணையரின் பரிந்துரைகளை ஏற்று, விழுப்புரம் தாலுகா பனங்குப்பம் கிராமத்தில் உள்ள பயன்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை பங்களா காலி புறம்போக்கு நிலத்தினை, அருங்காட்சியகம் அமைத்திட சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறைக்கு நில மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, விழுப்புரத்தில், அருங்காட்சியகம் அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும், அருங்காட்சியக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
இந்த அரசாணை மூலம் பனங்குப்பத்தில் அருங்காட்சியகம் அமைவது உறுதியாகியுள்ளதை, வரவேற்கிறோம்.
பணிகளை உடனே தொடங்க வேண்டும். நிரந்தர அருங்காட்சியகம் அமையும் வரை, துறையின் அமைச்சர் அறிவுறுத்தியபடி விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.