மாவட்டத்தில் வறட்சியால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம்:இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என அதிகாரிகள் அறிவுரை
மாவட்டத்தில் வறட்சியால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம்:இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என அதிகாரிகள் அறிவுரை
UPDATED : ஜூலை 29, 2026 06:12 PM
ADDED : ஜூலை 29, 2026 06:11 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வறட்சியால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது காரீப் பருவத்தில் விவசாயிகள் நெல், மணிலா, கம்பு உள்ளிட்ட பயிர் சாகுபடியை செய்துள்ளனர்.
அதன்படி, மாவட்டத்தில் 2033 எக்டர் நெல், 51.510 எக்டர் மக்கா சோளம், 366.900 எக்டர் சிறு தானியம், 34 எக்டர் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது.
இந்த பருவமழையை நம்பி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மானாவாரி மற்றும் கிணற்று பாசன பயிர் சாகுபடியை துவங்கினர். ஆனால், எல்நினோ தாக்கத்தால், மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
மாவட்டத்தில் இயல்பாக பெய்யும் பருவமழையும், பெய்யாமல் பொய்த்துவிட்டது. மாவட்டத்தில் பருவமழையானது ஜன., மாதம் 9.72 மி.மீ., பிப்., 8.63, மார்ச் 8.68, ஏப்., 11.25, மே 27.25, ஜூன் 54.70, ஜூலை 72.30, ஆக., 108.36, செப்., 121.30, அக்., 252.11, நவ., 317.80, டிச., 68.20, என மொத்தம் ஆண்டிற்கு சராசரியாக, 1060.30 மி.மீ., இயல்பான மழை அளவாக உள்ளது.
ஆனால், இந்தாண்டு ஜன., 5.77 மி.மீ., மே 43.69, ஜூன் 55.06, ஜூலை 9.66 என 114.18 மி.மீ., மழை பதிவாகியது. இதில், பிப்., முதல் ஏப்., வரை மூன்று மாதங்கள் மழை பொழிவு இல்லை.
ஜன., மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை 192.53 மி.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில் 114.18 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது.
இயல்பான அளவைவிட, 78.35 மி.மீ., மழை குறைவாக பெய்துள்ளது. பருவமழை குறைந்துள்ளதாலும், எல்நினோ தாக்கத்தாலும் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், மானாவாரி மட்டுமின்றி கிணற்று பாசன விவசாய பயிர்களும் தண்ணீரின்றி கருகி வருகிறது.
இதனால், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் விளைச்சல் இல்லாமல் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் ஆண்டுதோறும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2026-27ம் ஆண்டில் சாகுபடி செய்யும் காரீப், சிறப்பு (சம்பா) மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் காரீப், சம்பா மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காரீப் பருவத்திற்கு 13 வட்டாரங்களில் 380 வருவாய் கிராமங்களில் நெல் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மணிலா 24 குறுவட்டங்களிலும், கம்பு 8 குறுவட்டங்களிலும், வாழை 7 குறுவட்டங்களிலும் மற்றும் மரவள்ளி 5 குறுவட்டங்களிலும் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் நாளை 31ம் தேதிக்குள்ளும், மணிலாவிற்கு ஆக., 31ம் தேதிக்குள்ளும், வாழை, மரவள்ளிக்கு செப்., 15ம் தேதிக்குள்ளும் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதில், நெல் ஏக்கருக்கு 764 ரூபாயும், மணிலா 624.68 ரூபாயும், கம்பு ஏக்கருக்கு 252 ரூபாயும், வாழை ஏக்கருக்கு 725 ரூபாயும், மரவள்ளி ஏக்கருக்கு 507.06 ரூபாயும் விவசாயிகள் காப்பீடு தொகையாக செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, நேற்று வரை மாவட்டத்தில் 597 எக்டர் பரப்பளவிலான நெல் பயிருக்கும், மணிலாவிற்கு 177 எக்டரும், கரும்புக்கு 79 எக்டர் பரப்பளவில் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
இது குறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;எல்நினோ தாக்குதலால் ஏற்பட்டுள்ள வறட்சியால் மாவட்டத்தில் விவசாய பயிர்களில் விளைச்சல் குறையும் உள்ளது.
இந்த வறட்சியால் ஏற்படும் பயிர் விளைச்சல் இழப்புகளை ஈடுசெய்ய பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
வேளாண் துறை சார்பில் 13 வட்டாரங்களிலும் ஆட்டோ மற்றும் ஜீப் மூலம் பயிர் காப்பீடு செய்ய கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் நெல், மணிலா, கம்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசின் கால அவகாசத்திற்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
