/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயத்திலும் களம் இறங்கிய வடமாநில தொழிலாளர்கள்
/
விவசாயத்திலும் களம் இறங்கிய வடமாநில தொழிலாளர்கள்
ADDED : அக் 12, 2025 04:20 AM

செஞ்சி : செஞ்சி பகுதியில் முதன் முறையாக விவசாய வேலைக்கு வடமாநில தொழிளாளர்களை ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு இணையாக விழுப்புரம் மாவட்டத்திலும் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதில் உழவுக்கும் அறுவடைக்கும் டிராக்டர்களை பயன்படுத்தும் விவசாயிகள், நாற்று எடுக்கவும், நடவு செய்யவும் ஆட்களையே நம்பி உள்ளனர்.
மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதி திட்டம் செயல்படுத்திய பிறகு தமிழகத்தில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்தது.
கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் விவசாய வேலைக்கு செல்வதில்லை. மாறாக அருகில் உள்ள நகரங்களில் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற் சாலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.
விவசாயம் போன்ற உடல் உழைப்பு வேலைக்கு கிராமங்களிலும் ஆட்கள் கிடைப்பதில்லை.
செஞ்சி பகுதியில் நெல் நடுவு வேலைக்கு வெளியூர் ஆட்களை கூடுதல் பணம் கொடுத்து அழைத்து வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் செஞ்சி அடுத்த மீனம்பூரைச் சேர்ந்த விவசாயி அப்ரார் உசேன் தனது 15 ஏக்கர் விவசாய நிலத்தில் நடவு வேலைக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
உள்ளூர் ஆட்களைக் கொண்டு நடவு செய்யும் போது 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் ஏக்கர் ஒன்றுக்கு 5,500 ரூபாய்க்கு நடவு செய்ய ஒப்புக்கொண்டு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் இடைவேளை இன்றி நடவு செய்து ஒரே நாளில் ஐந்து ஏக்கர் அளவிற்கு நடவு செய்துள்ளனர்.
இதனால் விவசாயிகளுக்கு நேரமும், கூலியும் மிச்சமாவதாக விவசாயி அப்ரார் உசேன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஓட்டல்கள், கார்பெண்டர்கள், பெயிண்ட்டர்கள், ரோடு போடுபவர்கள், கட்டட வேலை செய்பவர்கள் என எல்லா துறையிலும் களம் இறங்கி விட்ட வடமாநில தொழிலாளர்கள் தற்போது விவசாய வேலையிலும் களம் இறங்கி விட்டனர்.